சென்னை

காக்க காக்க திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையுடன் கவுதம் மேனன் வந்தால் தாமும் சூர்யாவும் நடிக்கத் தயார் என ஜோதிகா அறிவித்துள்ளார்.

கடந்த 2003 ஆம் வருடம் வெளி வந்த காக்க காக்க திரைப்படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா நடித்திருந்தனர்.  அவர்கள் இருவரின் திரையுலக வரலாற்றில் இது ஒரு மைல் கல் எனச் சொல்லலாம்.  இதில் அன்புச் செல்வம் என்னும் காவல்துறை அதிகாரி தேடப்படும் ஒரு குற்றவாளியை உயிரைப் பணயம் வைத்து பிடிக்கும் கதை சொல்லப்பட்டிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் ஜோதிகா ரசிகர்களுடன் உரையாடினார்.  அப்போது ஒரு ரசிகர் அவரிடம் காக்க காக்க இரண்டாம் பாகம் எடுத்தால் நடிப்பீர்களா எனக் கேட்டார்  அதற்கு ஜோதிகா தாமும் சூர்யாவும் தயாராக உள்ளதாகவும் கவுதம் மேனன் கதையுடன் வந்தால் முடிவு எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கவுதம் மேனனின் ரசிகர்கள் ஒரு கதையைத் தயார் செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   ஏற்கனவே கவுதம் மேனன் தாம் சூர்யாவுடன் இணைந்து திரைப்படம் செய்ய உள்ளதாகவும் அதற்கான கதையைத் தயார் செய்து வருவதாகவும் கூறி இருந்தார்.

ஒரு காலத்தில் உயிர் நண்பர்களாக இருந்த சூர்யா மற்றும் கவுதம் மேனன் கருத்து வேற்றுமை காரணமாக மனத்தாங்கலில் இருந்தனர்.  தற்போது அந்த மனத்தாங்கல் மறைந்து மீண்டும் இருவரும் இணையலாம் எனக் கூறப்படுகிறது.