திருச்சி:
“கபாலி” பட  வசூல் காரணமாக நடிகர் ரஜினிகாந்துக்கு திருஷ்டி பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவரது ரசிகர்கள் ஆடுகளை பலியிட்டனர்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த, கபாலி திரைப்படம் கடந்த மாதம், 22ம் தேதி வெளியானது. உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியான இந்த படம், திருச்சி நகரில், ஐந்து தியேட்டர்களில் வெளியானது.
kabali
இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில்,  விளம்பரம், சானல் உரிமை விற்பனை உள்ளிட்ட பல்வேறு வகைகளிலும், 600 கோடி ரூபாய் வரை வசூலாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள உக்கிர காளியம்மன் கோவிலில், ரஜினி ரசிகர்கள், நேற்று கிடா வெட்டி, சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இது குறித்து, ரஜினி ரசிகர்கள்,” கபாலி திரைப்படம் முதல் நாளே, 113 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் வேறு எந்த படமும், இந்த சாதனையை இதுரை எட்டவில்லை. இந்த வசூல் சாதனையை கொண்டாடும் வகையிலும், இந்த சாதனையால் ரஜினிகாந்துக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்று வேண்டியும்  உக்கிர காளியம்மன் கோவிலில், கிடா வெட்டி பூஜை செய்தோம்” என்று தெரிவித்தனர்.