அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பதும் அதனை ஏற்பதும் இன்றைய காலத்தின் கட்டாயத்தேவை என்று கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாபர் மசூதி – ராமஜென்மபூமி இடம் சம்பந்தமான நீண்ட நாள் வழக்கிற்கு இன்று உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்துவிட்டது.

உச்சநீதிமன்ற இந்திய அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி அவர்களின் தலைமையில், இடம்பெற்றுள்ள 5 நீதிபதிகளும் ஒரே விதமான தீர்ப்பை அளித்திருக்கிறார்கள். இந்திய ஜனநாயகத்தின் சட்ட பிரச்சனைக்கு இறுதி முடிவு அளிக்கும் முடிவு உச்சநீதிமன்றத்திற்கே அளிக்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பு என்பது இறுதி தீர்ப்பாக அமைகிறது.

பாபரி மஸ்ஜித் – ராம்ஜென்ம பூமி வழக்கின் தீர்ப்பில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு அம்சத்தையும் பற்றிய வாதப் பிரதிவாதம் இன்றையத் தேவை இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பதும், அதனை ஏற்பதும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எல்லோரும் உடன்பட்டு ஒத்துழைப்பு வழங்கவேண்டியது ஆலத்தின் கட்டாயத் தேவையாக கருதுகிறோம்.

இந்திய மக்கள் அனைவரும் இதயப் பூர்வமாக இணைந்து வாழும் சமூக சுமூகத்தை உருவாக்க பாடுபவதே எல்லோருடைய தேசியக் கடையாகக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.