பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. ‘கை போ சே’, ‘ஷுத்தேஸி ரொமான்ஸ்’, ‘டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி’ உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.

சுஷாந்த் சிங் திடீரென்று தற்கொலை செய்து கொண்டது பாலிவுட் திரையுலகினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது மறைவுக்கு இந்தியத் திரையுலகினர், இந்திய கிரிக்கெட் அணியினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக, நடிகை கங்கணா ரணாவத் காணொலி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இதில் அவர் பாலிவுட்டை கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார்.

இந்த வீடியோ வைரலாகப் பரவியது. இந்தச் சமயத்தில் சோனாக்‌ஷி சின்ஹா தனது ட்விட்டர் பதிவில்

“பன்றிகளுடன் சண்டை போடுவதில் என்ன பிரச்சினை என்றால், பன்றிகளுக்கு அது சந்தோஷமாக இருக்கும். ஆனால், நம் மீது அழுக்காகும். நமது துறையின் உறுப்பினர் ஒருவர் காலமாகியிருக்கும்போது சிலர் அவர்கள் பிரச்சினைகளைக் குறிப்பிட்டுச் சொல்லி விளம்பரம் தேடுகிறார்கள். தயவுசெய்து அதை நிறுத்துங்கள். நீங்கள் உமிழும் எதிர்மறைக் கருத்தும், வெறுப்பும், நச்சும் இப்போது தேவையில்லாதது. மறைந்தவருக்குக் கொஞ்சம் மரியாதை கொடுங்கள்”.

இவ்வாறு சோனாக்‌ஷி சின்ஹா தெரிவித்துள்ளார்.