சென்னை தலைமை செயலகத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன், டிடிவி தினகரன் ஆதரவு நிலைபாடு கொண்டிருந்த கள்ளக்குறிச்சி அதிருப்தி எம்.எல்.ஏ., பிரபு திடீரென சந்தித்து பேசினார்.

அமமுக என்கிற இயக்கத்தை ஆரம்பித்து, அதை கட்சியாக டிடிவி தினகரன் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். அதேநேரம் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி காரணமாக, அவரது அமைப்பிலிருந்து பல்வேறு முக்கிய நபர்கள், அணி மாறி வருகின்றனர். சமீபத்தில் அவர் ஆதரவு நிலைபாடு கொண்டிருந்த எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த நிலையில், இன்றைக்கு கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு சந்தித்து பேசினார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடனிருந்தார். அப்போது தான் மீண்டும் அதிமுகவில் இணைவதாக எம்.எல்.ஏ பிரபு தெரிவித்ததாகவும், அதை முதல்வரும், துணை முதல்வரும் வரவேற்று ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.