மீரட்,

கில பாரத இந்துமகாசபா நிகழ்ச்சி மீரட்டல் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய இந்து மகாசபா தலைவர்,   இந்து தீவிரவாதம் குறித்து கமல் பேசியதற்கு, ‘அவரை சுட்டுக்கொல்ல வேண்டும்‘ என்றும் பேசினார்..

இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த கமல்,  இந்துத் தீவிரவாதம் இல்லை என்று இனி யாரும் சொல்ல முடியாது என கூறியிருந்தார். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு தமிழக்ததை சேர்ந்த பாஜக, சிவசேனையை சேர்ந்தவர்கள்  எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருந்தன.

மேலும்,  கமலின் சர்ச்சை பேச்சை கண்டித்து உ.பி., மாநிலம் பனராஸில் வக்கீல் ஒருவர் கமல் மீது புகார் செய்துள்ளார். இதை ஏற்று போலீசார் , இந்து மதத்திற்கு எதிராக கருத்து தெரிவித்தல், அவதூறு பரப்புதல் உள்ளிட்ட  ஐபிசி 500, 511, 298, 505 (சி), 295 (ஏ) ஆகிய 5  பிரிவுகளில் கமல்ஹாசன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அகில பாரத  இந்து மகா சபா தலைவர் பேசும்போது  “கமல் ஹாசனும், அவரைப் போன்றவர்களும் அவரை சுட்டுக் கொல்ல வேண்டும் அல்லது தூக்கிலிடப்பட வேண்டும்”, இதன் காரணமாக அவர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் நிகழ்ச்சியில் பேசிய அகில இந்துமகாசபா தேசியத்  துணைத் தலைவர் பண்டிட் அசோக் சர்மா, இந்து மத நம்பிக்கை கொண்ட மக்களுக்கு தவறான மொழியைப் பயன்படுத்தும் எவரும் இந்த புனித நிலத்தில் வாழ உரிமை கிடையாது, தங்கள் கருத்துக்களை திரும்ப பெற வேண்டும் என்றும் நடிகர் கமலஹாசன்  நடித்த திரைப்படங்களை புறக்கணிப்பு செய்ய வேண்டும் என்று கூறினார்.

மேலும் கமலஹசன் மற்றும் அவரது குடும்பத்தினரை தனிப்படுத்த வேண்டும்,  இதை அனைத்து இந்துக்களும் கடைபிடிக்க வேண்டும்,. உண்மையில் அனைத்து இந்தியர்களும் இதை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

‘இந்துக்கள் மற்றும் அவர்களின் மதத்தை அவமதிப்பவர்களை  மன்னித்து விடக் கூடாது” என மீரட் பகுதி இந்துமகா சபாவின் தலைவர்  அபிஷேக் அகர்வால் கூறினார்.

இந்து மகா சபா தலைவர்களின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.