சென்னை: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின்  பொருளாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவுக்கான நாட்கள் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின்  பொருளாளர் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருப்பூர், கோவையில் உள்ள அவரின் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

அனிதா ஹெல்த்வேர் என்ற பெயரில் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை சந்திரசேகர் நடத்தி வருகிறார். தமிழக அரசின் மகப்பேறு தொகுப்பு உள்ளிட்ட திட்டங்களின் ஒப்பந்ததாரராகவும் உள்ளார்.

கொரோனா பாதுகாப்பு  கவச உடைகளையும் அரசு மருத்துவமனைகளுக்கு சந்திரசேகர் விநியோகித்து இருக்கிறார். கமலின் ராஜ்கமல் திரைப்பட நிறுவனத்தில் இயக்குநராகவும் உள்ளார். மேலும் வருமான வரித்துறை சோதனைக்கு ஆளாகியுள்ள சந்திரசேகர் தமிழக அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது.