சென்னை:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் “சேரி பிஹேவியர்” என்று காயத்ரி ரகுராம் பேசியதற்காக தான் மன்னிப்பு கேட்க முடியாது என்று அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர்களில் ஒருவர் நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம். இவர் தன்  சக போட்டியாளரை சேரி பிகேவியர் என ஆத்திரத்துடன் தெரிவித்தார்.  இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. “காயத்ரி ரகுராம் சேரி வாழ் மக்களை அவமானப்படுத்திவிட்டார்” என்று சமூகவலைதளங்களில் பலரும் விமர்சித்தனர்.

தவிர இந் நிகழ்ச்சியில் ஆபாசமாக நடிகைகள் உலா வருகிறார்கள், மிருகங்களைப்போல நடிகர்களை அடைத்துவைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் புகார்கள் எழுந்திருக்கின்றன.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மீதான புகார் குறித்து விளக்கம் அளிக்க, அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “சேரி பிஹேவியன் என்று காயத்ரி ரகுராம் பேசியதை நான் எழுதி தரவில்லை. ஒருவளை நான் எழுதி கொடுத்ததை அவர் சொல்லியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டிருப்பேன்.

மற்றபடி பிக்பாஸ் வீட்டுக்குள் நடப்பதற்கு நான் பொறுப்பு கிடையாது” என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

மேலும், “நான் நடித்த முத்தக்காட்சியால் கெடாத கலாசாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியால் கெடுமா?” என்றும் கேள்வி எழுப்பினார் கமல்.