நிலவேம்பு குடிநீர் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

டெங்கு அபாயத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நிலவேம்பு குடிநீரே சிறந்த வழி என்று அரசு அறிவித்தது. இந்த நிலையில் இக்  குடிநீரால் மலட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவியது. மேலும், “பங்களாதேஷ்  நாட்டில் நிலவேம்புக்குடி நீரை பரிசோதனைக்காக எலிக்குக் கொடுத்ததாகவும் அதனால் எலி பாதிக்கப்பட்டதாகவும் ஒரு பதிவு சமூகவலைதளங்களில் உலவி  அதிர்ச்சி அளித்தது.

இந்த நிலையில், “நிலவேம்புக்குடி நீர்  குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தமிழக அரசு எச்சரித்தது.

கமல் – நிலவேம்பு குடிநீர்

இதற்கிடையே நடிகர் கமல்ஹாசன், “சரியான ஆராய்ச்சி முடிவு கிடைக்கும்வரை நிலவேம்புக் குடிநீர் விநியோகத்தில் ஈடுபட வேண்டாம்” என்று தனது ரசிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், “ஆராய்ச்சியை அலோபதி மருத்துவர்கள்தான் செய்யவேண்டும் என்றில்லை.பாரம்பர்யத்தைக் காப்பவர்கள் எனச் சொல்பவர்களும் செய்திருக்க வேண்டும். மருந்துக்கு பக்கவிளைவுண்டு என்பதும் பாரம்பர்யம்தான்” என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் பதிவிட்டுள்ளார்.

இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தைத் தொடர்புகொண்டோம். நிலவேம்புக்குடிநீர் குறித்து பரவும் பலவித தகவல்கள் குறித்தும் நடிகர் கமல் கருத்து குறித்தும் கேட்டோம்.

அவர் நம்மிடம் தெரிவித்ததாவது:

“அலோபதி (ஆங்கில) மருத்துவம் பரிந்துரைக்கும் பெரும்பாலான மருந்துகள், தாவரங்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. இதற்கு கீழாநெல்லி முதல் பல்வேறு தாவரங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆங்கில மருந்துகளை உதாரணமாகச் சொல்ல முடியும்.

தேயிலையைக் கொண்டு தலைவலியை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கப்பட்டதும் உண்டு.

வேதியல் துறை வளர்ந்தபிறகு, அந்த அந்த தாவரங்களில் இருந்து மூலக்கூறுகள் பிரிக்கப்பட்டு பல்வேறு நோய்களுக்கும் மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.  இப்படி மூலக்கூறுகளை பிரித்தெடுக்கும் அளவிற்கு தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்படும் வரை, வைத்தியர்கள் அந்த தாவரங்களில் இருந்து எடுக்கப்பட்ட கசாயம்,  லேகியத்தை நோயாளிகளுக்கு மருந்தாக அளித்துவந்தனர். இதன் மூலம் கொடிய நோய்களும் குணப்படுத்தப்பட்டன.

“பூனை மீசை” என்கிற தாவரம் இன்றும்கூட சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்து வருகிறது.

சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் “சிக்கன்குனியா” பெருமளவில் பரவி மக்களை அச்சுறுத்தியது நினைவிருக்கும். அப்போது இந்நோய்க்கு அலோபதி மருத்துவர்களும் “நிலவேம்புக்குடிநீரையே” பரிந்துரைத்தனர். இக்குடிநீரால் சிக்குன்குனியா நோய் மட்டுப்பட்டுத்தப்பட்டது அனைவரும் அறிந்த விசயம்.

ஆனால் இந்நோய்க்கு  “ட்யகிளோபினாக்” என்கிற அலோபதி (ஆங்கில) மருந்து இருக்கிறது. இதை அதிகமாக உட்கொண்டால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்கிறு நவீன (ஆங்கில) மருத்துவமே கூறுகிறது.

தற்போதும் டெங்கு காய்ச்சலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, நிலவேம்பை  உட்கொள்ளலாம் என்று அலோபதி மருத்துவர்களும் பரிந்துரைத்தனர் என்பதையும் அனைவரும் அறிவர்.

பப்பாளியும், டெங்குக்கு மருந்தாகும். இப்போது தனியார் நிறுவனம் ஒன்று பப்பாளி சாற்றினை எடுத்து மாத்திரை தயாரித்துவிட்டது.

அரசு சார்பில் நிலவேம்பு குடிநீர்..

இதில் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய விசயம்…  தாவரங்கள்,  மாத்திரைகளாக மாறிய பிறகு அதை அறிவியல் என்று ஏற்றுக்கொள்வோர்….  அந்தத் தாவரங்களை, பொடிசெய்து நோயாளிகளுக்கு அளித்தால் அதை “இது தவறு” என்று புலம்புவதைத்தான்.

ஒருங்கிணைந்த (integrated) மருத்துவ முறையே சரியானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதை அனைவரும் ஏற்கின்றனர். மருந்து தொடர்பான ஆராய்ச்சிகளில் ஆங்கில (அலோபதி) மருத்துவர்களுடன் சித்த மருத்துவர்களும் இணைந்து பணியாற்றுவதும் நடக்கிறது. இந்த நிலையில் சித்த வைத்திய முறையை இழிவு படுத்துவது கவனிக்கத்தக்கது.

இன்னொரு விசயம்…

மழை வெள்ளத்தால் சென்னையே மூழ்கியபோது, அரசு சார்பிலும், தன்னார்வலர்கள், தனிமனிதர்கள் பலரும் மக்களுக்கு நிலவேம்பு குடிநீரை அளித்தார்கள். இதன் காரணமாகத்தான் பெரும் அளவில் அதன்பின் கொள்ளை நோய் ஏற்படவில்லை. இல்லாவிட்டால் அத்தனை தண்ணீர் தேங்கிய நிலையில் பலவித நோய்கள் மக்களைத் தாக்கியிருக்கும். அதிலிருந்து காப்பாற்றியது நிலவேம்புதான்.

இடையில் பங்களாதேஷ் ஆராய்ச்சி குறித்த வதந்தி குறித்தும் பார்த்துவிடுவோம்.

அங்கு ஒரு கிலோ எடை கொண்ட எலிக்கு தினமும் இரண்டு கிராம் அளவுக்கு நிலவேம்பு பொடி அளித்தார்களாம். இப்படி ஏழுமாதம் அளிக்கப்பட்டபோது எலிக்கு பலவித உடல் உறுப்புகள் சீரழிந்துவிட்டனவாம்.

அதாவது எழுதபது கிலோ  எடை கொண்ட ஒரு மனிதருக்கு திணும் 140 கிராம் நிலவேம்பு அளித்ததாக வைத்துக்கொள்வோம்.

இப்படி ஏழு மாதங்கள் அளித்தால் உடல் உறுப்புகள் பாதிக்கத்தான் செய்யும்.

எப்படி என்று எளிய முறையில் விளக்குகிறேன்.

மீன் குழம்பு தமிழ்நாட்டில் மிகச் சுவையாக வைக்கப்படுகிறது பலரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதைத் தயாரிக்கும்போது, மிளகாய்ப்பொடி, புளி, வெந்தயம், சின்ன வெங்காயம், மல்லி எல்லாம் சேர்ப்போம்.

மீன் குழம்பு வைப்பதைக் கற்றுக்கொண்டு போகும் வெளி நாட்டவர் ஒருவர், “மீன்குழம்பில் நாலு ஸ்பூன் மிளகாய்ப்பொடி போடுகிறார்கள். ஆகவே சும்மாவே நாலு ஸ்பூன் மிளகாய்ப்பொடி சாப்பிடலாம்” என்று சொன்னால் எப்படி இருக்கும்? அதுபோலத்தான் இதுவும்.

அதாவது, பங்களாதேசில் வெறும் நிலவேம்பை கொடுத்து ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். ஆனால் இங்கே மக்களுக்கு அளிக்கப்படும் நிலவேம்புக்குடிநீரில் சுக்கு, மிளகு, திப்பிலி, சந்தனம், வெட்டி வேர் போன்றவை சேர்த்துத்தான் தயாரிக்கப்படுகிறது.

ஆனால் பங்களாதேசில் மீன்குழம்புக்குப் பதில் வெறும் மிளகாய்ப்பொடியை சாப்பிடலாம் என்று நினைப்பதைப்போல வெறும் நிலவேம்பை வைத்து ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.

ஆக அங்கு நடந்த ஆராய்ச்சியே அடிப்படையில் தவறு. அதன் முடிவை வைத்து எப்படி, இங்கே அளிக்கப்படும் நிலவேம்புக்குடிநீர் குறித்து தீர்மானிக்க முடியும்?

எந்த சித்த மருத்துவரும் கிலோவுக்கு இரண்டு கிராம் நிலவேம்பு அளிக்க வேண்டும் என்று கூறவே இல்லை. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதானே? தண்ணீரைக்கூட அதிகமாகக் குடித்தால் வாந்தி வரும்.

திருத்தணிகாசலம்

சரி.. நிலவேம்பை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்கிறார்கள்.

எந்த ஒரு மருந்தும் ஆராய்ச்சிக்கு உட்பட்டதுதான். நிலவேம்பு குறித்தும் தமிழக அரசே ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும். மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக.

அதே நேரம் மற்றொரு கோணத்தில் சிந்தித்துப்பாருங்கள். ஆங்கில மருந்துகள், ஆறு மாதம் முதல் ஆறு வருடங்கள் வரை ஆராய்ச்சி செய்யப்பட்டு புழக்கத்துக்கு வருகின்றன.

ஆனால் அப்படி வரும் மருந்துகளையே திடீரென, “மக்களுக்கு ஆபத்து” என்று தடை செய்து விடுகிறார்கள்.

பலவித ஆராய்ச்சிகளுக்குப் பிறகு புழக்கத்துக்கு வந்த விக்ஸ் ஆக்சன் 500 மருந்தை.. வேறு சில ஆராய்ச்சி செய்து தடை செய்தது ஒரு உதாரணம்.

ஆனால் தமிழ் சித்த மருந்துகள் பற்பல நூற்றாண்டுகளாக வழி வழியாக பயன்படுத்தப்பட்டு, பலன் காணப்பட்டு வருகின்றன. அதாவது ஆயிரமாண்டுகள் உதாரணங்கள் இவை.

சில நூறு வருடங்களுக்கு முன் வெள்ளையர் இங்கு ஆளத்துவங்கிய பிறகுதானே ஆங்கில (அலோபதி) மருந்துகள் வந்தன. அதற்கு முன் பாரம்பரிய மருந்துகளை உட்கொண்டு மக்கள் வாழ்ந்துகொண்டுதானே இருந்தார்கள்.

தவிர, இட்லியில் உள்ள அரிசி,உளுந்து, வெந்தயமும்.. அதை புளிக்கவைப்பதாலும் உடலுக்கு நன்மை பயக்கிறது என்றால்… ரசம் என்பது உடலுக்கு நன்மை அளிக்கிறது என்றால்… இதையெல்லாமும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்பார்களா? நாம் பாரம்பரியமாக அனுவித்து உணர்ந்து வரும் இந்த பண்டங்களே மருந்துதான். அதாவது மருந்தே உணவு, உணவே மருந்து என்றுதானே நம் முன்னனோர்கள் சொல்லிவைத்தார்கள். வாழ்ந்தும் காட்டினார்கள்.

இன்னொரு விசயத்தையும் கவனிக்க வேண்டும். ஜூரத்துக்காக இப்போது மருத்துவமனையில் உள் நோயாளியாக சேருபவர் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இதனால் வருமானம் குறைகிறதே என்கிற ஆதங்கத்தில் ஆங்கில மருத்துவர்கள் நிலவேம்பு குறித்த பொய்யான பரப்புரையை மேற்கொள்கிறார்கள் என்றே சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.

இதற்குத்தான் நடிகர் கமல்ஹாசன் உடன்பட்டுப்போயிருக்கிறார். ஒரு முறை இவர், “ஆஸ்கர் (சினிமா) விருது என்பது  அமெர்க்க ஸ்டேண்டர்ட. தமிழ்ப்படத்தை கலை கலாச்சார்ததை அவர்களுக்குப் புரிந்துகொள்ளத் தெரியாது” என்று கூறியிருந்தார்.

இப்போது இவர்தான் நிலவேம்பு குறித்து அமெரிக்காவில் ஆய்வு செய்த பிறகு முடிவு செய்யலாம் என்கிறார்.

மக்களிடம் வரவேற்பு இருந்தவரை திரைத்துறையில் இருந்தார். வரவேற்பு அற்றுப்போன பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் காம்பியரர் ஆனார், தனியார் துணிக்கடைகளிடம் பணம் வாங்கிக்கொண்டு, “அந்தக் கடை துணிதான் பெஸ்ட்” என்று விளம்பரப்படத்தில் நடித்தார். அதுபோல  வெளிநாட்டு மருந்து கம்பெணி சொன்னால் “அதுதான் பெஸ்ட்” என்று சொல்லும் பரிதாப நிலைக்குப் போய்விட்டார் கமல் என்றே தோன்றுகிறது.

நிலவேம்புக் குடிநீரை மக்களுக்கு பலரும் தன்னார்வமாக அளித்து வருகிறார். இதுவரை கமல் இதற்காக ஒரு ரூபாய் செலவழித்திருப்பாரா? அவர்களது ரசகர்கள்தான் எங்காவது நிலவேம்புக்குடிநீர் அளித்தார்களா?

நிலவேம்புக்குடிநீர் அளித்து எத்தனையோ பேரின் உயிரை.. எத்தனையோ பேர் காக்கிறார்கள். பொய்யான பீதியை ஏற்படுத்தி அதைத் தடுப்பது எத்தனை கொடூரமானது?

நிலவேம்பு குறித்த கமல் கருத்து முட்டாள் – அயோக்கியத்தனம். அவரும் அவரைப்போன்ற சிலரும் இனியாவது சிந்திக்க வேண்டும், திருந்த வேண்டும்” என்று சொல்லி முடித்தார் சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்.