திருச்சி: மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திருச்சியில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் நடிகர் கமல்ஹாசன், “காமராஜர் எனது தந்தை, எம்ஜிஆர் எனது சொத்து” என சொந்தம் கொண்டாடிய கமல்ஹாசன், திமுக, அதிமுக மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் திருச்சியில் ஓட்டு வேட்டையாடி வருகிறார். திருச்சி அருகே உள்ள  திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.  திருவெறும்பூர் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது,

நான் 234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறேன். எந்த ஊருக்கு சென்றாலும், திறந்து கிடக்கிற சாக்கடை, போக்குவரத்து நெரிசல் இருக்கத்தான் செய்கிறது. இங்கு அரியமங்கலம் பகுதியில் உள்ள குப்பைமேட்டால் உங்களுக்கு என்ன பெருமை இருக்க போகிறது. குப்பையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். எங்கள் வேட்பாளர்களுக்கு அரசியல் பயிற்சி இல்லாமல் இருக்கலாம். ஆனால் மக்கள் சேவையில் அனுபவம் இருக்கிறது.

தமிழகத்தை ஆளுகிற இரு கட்சிகளுக்கும் ஊழலை தவிர வேறெதுவும் தெரியாது.

எடப்பாடி பழனிசாமியை பார்த்து அவர் ரூ.10 லட்சம் கோடி சுருட்டி விட்டார் என்று மு.க.ஸ்டாலின் சொல்கிறார்.

ஆனால் அவரோ, ஸ்டாலினை பார்த்து, இவர் ரூ.20 லட்சம் கோடி சுருட்டிவிட்டார் என்கிறார்.

அது இல்லை என்று இருவருமே சொல்லவில்லை.

இப்போது நாம் கணக்கு போடுவது என்னவென்றால், நம்முடைய பணம் ரூ.30 லட்சம் கோடியை இவர்கள் இருவரும் அடித்துவிட்டார்கள் என்பது தான்.

ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி அவர்களே வேட்டு வைத்து கொள்கிறார்கள்.

எங்கள் ஆட்சியின் கல்வி திட்டத்தின்படி மாணவ-மாணவிகள் படிக்கும்போது, தற்கொலைகள் நிகழாது. இதை செயல்படுத்த அறிவார்ந்த கூட்டத்தை தேடி பிடித்து இருக்கிறேன்.

காமராஜர் எனது தந்தை, எம்.ஜி.ஆர்  எனது சொத்து. அரசியல் எங்களுக்கு தொழில் அல்ல என்றவர், நான் வரும் வழியில் ”ஜெயிச்சாசு” ”ஜெயிச்சாசு” என்ற குரல் கேட்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றினால் தான் வெற்றி. வருகிற ஏப்ரல் 6-ந் தேதியை சரித்திரம் திரும்பும் நாளாக மாற்றுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.