மும்பை: நடிகர் திலீப் செய்தது போன்று யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.என்றும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்று அச்சமாக உள்ளது என்றும் நடிகை கங்கனா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுக்கும், நடிகை கங்கனா ரனாவத்துக்கும் இடையே ஆரம்பத்தில் நட்பு ஏற்பட்டது. பிறகு இருவருக்குள் பிரச்சனை ஏற்பட்டு ஒருக்கொருவர் வக்கீல் நோட்டீஸ் கொடுத்தனர். இந்த நிலையில் தொலைககாட்சி நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட கங்கனா, ரித்திக் பற்றி தெரிவித்திருப்பதாவது:
“எனக்கும், ரித்திக் ரோஷனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட பிறகு அவரது தந்தை ராகேஷ் ரோஷனை அணுகி இதை தீர்த்து வைக்குமாறு தெரிவித்தேன். ரித்திக்கை சந்தித்து பேச ஏற்பாடு செய்வதாக அவரும் கூறினார்.
அவர் கூறிய சந்திப்பு இன்னும் நடக்கவில்லை. என்னை பார்த்தாலே ரித்திக் ரோஷன் தலை தெறிக்க ஓடி விடுகிறார். அதன் பிறகு எங்கு பிரச்சனையை பேசித் தீர்க்க முடியும்?
தனது இமேஜ், குடும்ப வாழ்க்கை, பிள்ளைகள் முக்கியம் என்றால் என்னுடன் அவர் தொடர்பு வைத்திருந்திருக்கக் கூடாது. இப்போது எனக்கு பயமாக இருக்கிறது.
மலையாள நடிகர் திலீப் செய்ததை பாருங்கள். அவர் செய்தது போன்று யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். பெண்கள் கர்ப்பமாகிறார்கள், சுட்டுக் கொல்லப்படுகிறார்கள், இது போன்ற விஷயங்களால் பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். என் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்று அச்சமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார் கங்கனா.
இவரது பேச்சு பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.