தீவிர வாக்குச் சேகரிப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ஈடுபட்டு வருகிறார்.

அந்தவகையில் காஞ்சிபுரத்தில் பத்திரிகையாளர்கள் மத்தியில் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் திட்டம், வீடு தேடி வரும் அரசு சேவை, வீடுகளை மின்னணு வீடுகளாக மாற்றுவது உள்ளிட்ட 7 அம்சத் திட்டங்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.

இதில் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் திட்டம் குறித்து கமல் பேசும்போது, “பெண் சக்தி திட்டம், பல முறை நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கும் ஒன்றுதான். ஆனால், அதைக் கிண்டலடிக்கும் போக்கு உள்ளது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் ‘பெய்ஜிங் அறிவிப்பு’ என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட திட்டம்தான் ‘பெண் சக்தி’ என்கிற திட்டம். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் அந்தத் திட்டம், சாத்தியமுள்ள செயல்படுத்தக்கூடிய ஒரு திட்டம்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த திட்டத்தைப் பாராட்டி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசிதரூர் எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில் இதை வாழ்த்தி பதிவிட்டிருந்தார் .

இந்நிலையில் கங்கணா ரணாவத், சசிதரூரின் ட்வீட்டை மேற்கோளிட்டு தனது ட்விட்டர் பதிவில், “எங்கள் அன்புக்குரியவர்களுடன் நாங்கள் கொள்ளும் உறவுக்கு ஒரு விலை அட்டையை ஒட்டாதீர்கள். எங்கள் பிள்ளைகளை நாங்கள் வளர்ப்பதற்குச் சம்பளம் வேண்டாம். எங்களுக்கே உரித்தான ஒரு குட்டி ராஜ்ஜியத்தில் நாங்கள் ராணியாக வீற்றிருக்க எங்களுக்குச் சம்பளம் வேண்டாம். எல்லாவற்றையும் தொழிலாகவும் பார்க்காதீர்கள். மாறாக உங்கள் மனைவியிடம் நேசிக்கும் பெண்ணிடம் சரணாகதி ஆகிவிடுங்கள். பெண்களுக்குத் தேவை நீங்கள் கொடுக்கும் மரியாதையும் பகிரும் அன்பும்தான். சம்பளம் அல்ல” என்று தெரிவித்துள்ளார் கங்கணா ரணாவத்.