சென்னை: சென்னை விமான நிலையத்தில் காவலர் ஒருவர் திமுக எம்.பி. கனிமொழியிடம்,  “நீங்கள் இந்தியனா?” என கேள்வி கேட்டதாக, டிவிட் போட்டிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா? பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டு கிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள் என்று காட்டமாக டிவிட் போட்டுள்ளார்.

திமுக மகளிரணி தலைவியும், எம்.பியுமான கனிமொழி,  தனது டிவிட்டர்  பக்கத்தில், ‘சென்னை விமான நிலையத்தில் ஒரு சிஐஎஸ்எஃப் காவலரிடம், எனக்கு இந்தி தெரியாது என்பதால் ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் பேச முடியுமா என கேட்டபோது, அவர், “நீங்கள் இந்தியனா?” என்று என்னிடம் கேட்டுள்ளார். இந்தி மொழி அறிவதை வைத்தே, இந்தியனாக இருப்பதற்கு சமம் என்பது எப்போதிலிருந்து உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன்.’ என பதிவிட்டுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், இந்தி தெரியாது என்று சொன்னதால், ‘நீங்கள் இந்தியரா?’ என்று விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர், கனிமொழியை பார்த்துக் கேட்டுள்ளார். இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா? பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள்!

இவ்வாறு காட்டமாக பதிவிட்டுள்ளார்.