மும்பை:

கன்னட நடிகையை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் மும்பையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பிரபல கன்னட நடிகையான பரூல் யாதவ் மும்பையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2 தினங்களுக்கு முன் தனது செல்ல பிராணியான நாய்க்குட்டியை அழைத்துக் கொண்டு வாக்கிங் சென்றார். இவரது வீட்டின் அருகே மாலை 5.30 மணிக்கு சென்றபோது 6 தெரு நாய்கள் அவரை சுற்றி வளைத்தது.

செல்ல பிராணியை கடிக்க அந்த தெரு நாய்கள் முயற்சித்தன. அதை காப்பாற்றுவதற்காக பரூல் போராடினார். ஆனால், அந்த தெரு நாய்கள் நடிகையை கடித்து குதறி விட்டன. இதில் உடலில் முகம், கை, கால், கழுத்து பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதி என்றபோதும் ஒருவர் கூட அவரை மீட்க உதவிக்கு வரவில்லை. அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் தான் ஓடிச் சென்று காப்பாற்றினார்.

உடனடியாக அவர் மும்பையில் உள்ள கொகிலபேன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு நாய் கடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று தலையில் ஒரு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

கன்னட திரைத் துறையில் பிரபலமான பரூல் யாதவ் ‘பாக்கியவிதாதா’ என்ற டிவி சீரியல் மூலம் 2011ம் ஆண்டு ‘கோவிந்தா நமஹா’ என்ற திரைப்படம் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தார். மேலும் இவர் மலையாளம், தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் சந்தன கடத்தல் வீரப்பம் என்கவுன்டர் திரைப்படம் மூலம் தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.