பெங்களூரு,

பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி இன்று அதிகாலை காலமானார். மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா ராஜ்குமார். இவர் உடல்நலமில்லாமல் பெங்களூரு எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டி ருந்தார். அவருக்கு 78 வயதாகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பர்வதம்மாவின் உடல் நிலை நேற்று இரவு மோசமாகியது. அதைத்தொடர்ந்து  சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 4.40 மணியளவில் பர்வதம்மா மரணமடைந்தார்.

பர்வதம்மா தனது கண்களைத் தானம் செய்துள்ளார் என்பதால் அவரது கண்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து பர்வதம்மாவின் உடல், அவரது  மகன் ராகவேந்திரா ராஜ்குமாரின்  இல்லத்திற்கு உடனடியாக எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக பர்வதம்மாவின் உடல் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

கன்னட நடிகர்  ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவின் மறைவைத் தொடர்ந்து கர்நாடகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கன்னட மக்கள் மத்தியில் ராஜ்குமாரைப் போலவே பர்வதம்மாவுக்கும் செல்வாக்கு அதிகம். அவரது மறைவுக்கு பல்துறைப் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பர்வதம்மா வாழ்க்கை குறிப்பு

பர்வதம்மா  கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்திலுள்ள சாலிகிராமா என்ற கிராமத்தில் 1939ம் ஆண்டு பிறந்தவர். இவரது பெற்றோர் அப்பாஜி கவுடா -லட்சுமம்மா. தனது 13வது வயதில் ராஜ்குமாரை மணந்தார்.

திருமணத்திற்குப் பின்னர் ராஜ்குமாரும், இவரும் இணைந்து வஜ்ரேஸ்வரி கம்பைன்ஸ் (பூர்ணிமா என்டர்பிரைசஸ்) என்ற பட நிறுவனத்தைத் தொடங்கினர்.

ராஜ்குமார் ஹீரோவாக நடித்த திருமூர்த்தி படம்தான் பர்வதம்மா தயாரிதத முதல் படமாகும்.

இவருக்கு 3 சகோதரர்கள் உள்ளனர். அவர்களும்  திரைப்படத் தயாரிப்பாளர்கள்தான்.

பர்வதம்மா தனது நிறுவனத்தின்மூலம்  80 படங்களுக்கும் மேல் தயாரித்து வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரது மகன்கள்  சிவராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார், புனித் ராஜ்குமார் மூன்று பேரும் கன்னட திரையுலகில் ஹீரோக்களாக வலம் வருகிறார்கள்.