சென்னை,

மிழகத்தில் இதுவரை எத்தனையோ ரெய்டுகள் நடைபெற்றுள்ளது. கன்னித்தீவு போல ரெய்டுகள் நீண்டுக்கொண்டே செல்கின்றன என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கிண்டலாக கூறினார்.

அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வருமானவரி சோதனைகள் நடை பெற்றது. அதன் தற்போதைய நிலை  என்ன? இந்த ரெய்டால் மட்டும் என்ன நடக்கப்போகிறது என்றும்  கேள்வி எழுப்பி உள்ளார்

இன்று அதிகாலை முதலே தமிழகத்தில் பரபரப்பாக ரெய்டு குறித்த தகவல்களே பேசப்பட்டு வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு 187 இடங்களில் ரெய்டு நடைபெறுவதாக கூறப்படுகிறது.

சசிகலா, தினகரன், திவாகரன் மற்றும் அவர்களது நிறுவனங்கள், உறவினர்கள்  வீடுகளில் ரெய்டு நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,

“இதுவரைக்கும் எத்தனையோ ரெய்டுகளை நடத்திட்டாங்க ஆனா எந்த நடவடிக்கையும் எடுக்கலையே? அப்போ இந்த ரெய்டால் மட்டும் என்ன நடக்க இருக்கிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்க  வேண்டியது அவசியம் என்று கூறினார்.

மேலும், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கரூர் அன்புநாதன் வீட்டில் ரெய்டு, மணல் மாஃபியா சேகர் ரெட்டியின் வீட்டில் ரெய்டு, மாஜி அ.தி.மு.க. அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீட்டில் ரெய்டு, முன்னாள் தலைமைச்செயலாளர் ராம மோகன்ராவ் வீட்டில் ரெய்டு, குட்கா புகழ் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் அவரது ஏகப்பட்ட சொத்துக்களிலும் தொடர்ந்து ரெய்டுகள், குட்கா பிரச்னையில் சிக்கிய போலீஸ் அதிகாரியின் வீட்டில் ரெய்டு என்று ஏகப்பட்ட ரெய்டுகள் இதுவரையில் நடந்திருக்கிறது.

ஆனால், அந்த ரெய்டு காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?   கன்னித்தீவு மாதிரி ரெய்டு சம்பவங்கள் மட்டும் இழுத்துட்டே போகுது.

இந்தமுறையாவது இது பற்றிய முழுமையான விளக்கத்தை சம்பந்தப்பட்ட அமைச்சகம் தரவேண்டும், விளக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் செய்தியாளர்களிடம்,  என்கிட்ட இந்த கேள்வியை கேட்கிற நீங்க சம்பந்தப்பட்ட துறையிடமும்  கேட்கணும்.” என்று செய்தியாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இந்த ரெய்டுக்கு பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருக்குதா?’ என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், ‘இதை பற்றி நீங்க என்ன நினைக்குறீங்கன்னு சொல்லுங்க, அப்புறம் நான் சொல்றேன்’ என்று எதிர்கேள்வி கேட்டார்.