டில்லி,

ழலை ஒழிக்க தொடங்கப்பட்ட ஆம்ஆத்மி கட்சியில் தற்போது குடுமிப்பிடி சண்டை நடைபெற்று வருகிறது.

டில்லியில் நடைபெற்று முடிந்த மாநகராட்சி தேர்தலில் ஆம்ஆத்மி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, கட்சிக்குள் குடுமிப்பிடி சண்டை மூண்டது.

கெஜ்ரிவாலின்  நண்பரும் கட்சியின் மூத்த நிர்வாகிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது.  பின்னர் கட்சியின் மூத்த நிர்வாகிகளால் சமாதானப்படுத்தப்பட்டு இருவருக்கும் இடையேயான மோதல் சரி செய்யப்பட்டது.

இந்நிலையில், ஆத்ஆத்மி அரசில் முன்னாள் அமைச்சராக இருந்த கபில் மிஸ்ரா கட்சி தலைவர் கெஜ்ரிவால் மீது ஊழல் புகார் தெரிவித்தார்.

தனது மந்திரி பதவி பறிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த கபில் மிஸ்ரா, கெஜ்ரிவால் மீது ரூ.2 கோடி ஊழல் புரிந்ததாக குற்றச்சாட்டு கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக ஊழல் கோப்புகளுடன் கபில் மிஸ்ரா லஞ்ச ஒழிப்புதுறை அலுவலகம் சென்று கோப்புகளை சமர்ப்பித்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கெஜ்ரிவால் மீது ஊழல் புகார் கூறிய கபில் மிஸ்ரா சஸ்பென்ட் செய்யப்பட்டார். இதன் காரணமாக டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் குழப்பம் உச்சத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில்  ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரங்களுக்கான ஆட்சிமன்றகுழு கூடியது. இதில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கபில் மிஸ்ராவை சஸ்பென்ட் செய்தது.

நீக்கப்பட்ட அமைச்சர் கபி்ல் மிஸ்ரா , ஆம்ஆத்மியின்  மூத்த நிர்வாகி குமார் விஷ்வாஸ்-க்கு ஆதரவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

துடைப்பம் சிம்பலை வைத்துள்ள ஆம்ஆத்மி முதலில் தனது கட்சியை துடைப்பதால் தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.