பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் 50 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் பல பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன.

கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் ஜனவரி 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தின் பல பகுதிகளில் ஆசிரியர்கள் 50 பேருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

பெலகாவியில் 22 ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கடோலி என்ற பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா உறுதியாக அந்த பள்ளி உடனடியாக மூடப்பட்டு உள்ளது.

இதையடுத்து, கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் பள்ளிகளுக்கு வரவேண்டாம் என்ற கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். சித்ரதுர்கா மாவட்டத்தில் கொரோனா காரணமாக 7 பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. விஜயபுரா மாவட்டத்தில் உள்ள போலேகான் கிராமத்தில் உள்ள பள்ளி ஆசிரியர் கொரோனாவால் பாதிக்கப்பட அந்த பள்ளியும் மூடப்பட்டு உள்ளது.

இது குறித்து சுகாதார அமைச்சர் சுதாகர் கூறி இருப்பதாவது: யாரும் பீதி அடைய வேண்டாம். அரசு தரப்பில் இருந்து அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு உரிய சிகிச்சை முறைகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன என்று கூறினார்.