பெங்களூரு:

டுத்த மாதம் (மே) 12ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள  கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநிலத்தில், தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.  தற்போதைய சட்டமன்றத்தின் ஆயுட்காலம் மே 28ந்தேதியுடன் முடிவடைய இருப்பதால், கடந்த மாதம்  27ந்தேதி இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்தது.

அதன்படி  கர்நாடக சட்ட சபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் (மே) 12-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இதையொட்டி இன்று (செவ்வாய்க் கிழமை) வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இதனால் தேர்தல் அலுவலகங்களை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு தாக்கல் செய்யும் பணி வருகிற 24-ந் தேதி வரை நடைபெறும். மறுநாள் 25-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும்.

மனுக்களை வாபஸ் பெற 27-ந் தேதி கடைசி நாள் ஆகும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மனு தாக்கல் செய்ய முடியாது.

தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம்.

இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குவதால், தேர்தல் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அத்துடன் மனு தாக்கல் செய்ய வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

அதைத்தொடர்ந்து  தேர்தல் வாக்குப்பதிவு  அடுத்த மாதம் 12ந்தேதி நடைபெற உள்ளது.  மே15ந்தேதி வாக்கு எண்ணிகை நடைபெற்று முடிவு அறிவிக்கப்படும்.

தேர்தலையொட்டி  காங்கிரஸ் மற்றும் பாஜக தனது வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்டுள்ளனர். அதில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளராக சித்தராமையாவும், பாஜகவின் முதல்வர் வேட்பாளராக எடியூரப்பாவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  கர்நாடகாவில் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.