பெங்களூரு: கர்நாடகாவில் ஊரடங்கு தேவை இல்லை என்று தாம் கருதுவதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா அதிரடியாக கூறி உள்ளார்.

பெங்களூருவில் உள்ள சங்கர மடத்தில் கர்நாடக முதலமைச்சரான எடியூரப்பா சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கொரோனாவில் இருந்து மக்களை காக்கவேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டேன். மாநில அரசின் நிதி நிலை மோசமாக இருந்த போது 1,000 கோடியை விடுவித்தேன். விவசாயிகளுக்காக பிரதமர் சம்மான் திட்டத்தின் கீழ் 50 லட்சம் விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 உதவித்தொகையை வழங்கியுள்ளேன்.

கொரோனா வைரசை தடுக்க அனைத்து வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. பரிசோதனைகள் அதிகரிக்கப்பட உள்ளது. கர்நாடகத்திற்கு இனி ஊரடங்கு தேவை இல்லை.

பொதுமக்கள் தொந்தரவின்றி இயல்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே விருப்பம். கர்நாடகாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. மேலும் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.