பெங்களூரு:

பாஜகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி கொறடா உத்தரவை மதிக்காத 4அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், காங்கிரஸ் சட்ட மன்ற கட்சி தலைவரும்,  முன்னாள் கர்நாடக முதல்வருமான சித்தராமைய கூறி உள்ளார்.

கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடர் 6ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று முதல்வர் குமாரசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக கடந்த 2 நாட்களாக சில அதிருப்தி காங்கிரஸ் எம்எல் ஏக்கள் சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்காமல் புறக்கணித்து வருகின்றனர்.

இதன் காரணமாக, ஜேடிஎஸ் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக கூறி பாஜக எம்எல்ஏக்கள்  சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு சபையை முடக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சபைக்கு வர வேண்டும் என்று கட்சி கொறடா உத்தரவிட்ட நிலையிலும் 6 எம்எல் ஏக்கள் தொடர்ந்து சபை நடவடிக்கைகளை புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களில் சிலர் விளக்கம் அளித்துள்ள நிலையில்இ  4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக பிடியில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

கோகாக் தொகுதியை சேர்ந்த ரமேஷ் ஜார்கிகோலி, அதானி தொகுதியை சேர்ந்த மகேஷ் குமுதல்லி, சின்கோலி தொகுதியை சேர்ந்த உமேஷ் ஜாதவ், பெல்லாரி தொகுதியை சேர்ந்த நாகேந்திரா ஆகிய 4 எம்எல்ஏக்கள் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க மாநில காங்கிரஸ் தலைமை முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

அவர்கள் 4 பேர் மீது கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் புகார் அளிக்க சித்தராமையா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நால்வரை எடியூரப்பா கடத்திவிட்டதாக பெங்களூர் போலீசில் வழக்கறிஞர் ஆர்.எல்.என்.மூர்த்தி என்பவர்   புகார் மனு அளித்துள்ளார். அதில், பாஜக தலைவர் எடியூரப்பா, பாஜக மல்லேஸ்வரம் தொகுதி எம்எல்ஏ அஸ்வத் நாரா யணன் மற்றும் சிலர், காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தி கண்காணாத இடத்தில் மறைத்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த புகார் சம்பவம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.