டில்லி:

ர்நாடக மாநிலத்தில் நிலவும் அரசியல் பரபரப்புக்கிடையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் நாளை காலை 10.30 மணிககு தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.

இதற்கிடையில் அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் முயற்சியில் கட்சிகள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

குமாரசாமி அரசுக்கு எதிராக காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி, ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள  நிலையில்,  குமாரசாமி ஆட்சி கவிழும் சூழல் உருவாகி உள்ளது. இந்த அரசியல் பரபரப்புக்கு காரணம் மாநில பாரதிய ஜனதா கட்சி என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், தங்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க வேண்டும் என  உத்தரவிட கோரி அதிருப்தி எம்எல்ஏக்கள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சபாநாயகர் எந்தவித முடிவும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்ட உச்சநீதி மன்றம் வழக்கை இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

அப்போது வழக்கு தொடர்பாக பரபரப்பான வாதங்கள் நடைபெற்றன.  அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, சட்டமன்ற  பேரவை தலைவரின் முடிவு நீதிமன்றத்துக்கு கட்டுப்பட்டது என வாதிட்டார்.

சபாநாயகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்அபிசேக் மனு சிங்வி  அதிருப்தி எம்எல்ஏகள் சிலரின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ராஜினாமா மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக தெரிவித்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து வாதாடிய முகுல் ரோத்தகி, இந்த வழக்கிற்கும், சபாநாயகர் முடிவுக்கு சம்மந்தம் இல்லை என்றும, தற்போது, கர்நாடகாவில் தற்போது மைனாரிட்டி அரசு  உள்ளதாகவும், இந்த நிலையில், ராஜினாமா கடிதத்தை ஏற்காமல்இருப்பதன் மூலம்,  நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சியை காப்பாற்றும் வகையில், பங்கு பெறவைக்க  முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டினார்

ஒரு கட்சியில் இருக்க பிடிக்காமல் தான் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்கிறார்கள் என்றும், அவர்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள சொல்வது எந்த வகையில் நியாயம் என்றும் ரோத்தகி கேள்வி எழுபிபினார்.

இதையடுத்து சபாநாயகர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் அபிசேக் மனு சிங்வியிடம் கேள்வி எழப்பிய நீதிபதிகள், 11 எம்எல்ஏக்கள் நேரில் வந்து ராஜினாமா கடிதத்தை கொடுத்த பின்னரும், அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த சிங்வி,  ராஜினாமா கடிதத்தின் பின்னணியை ஆராய வேண்டிய கடமை சபாநாயகருக்கு உள்ளதாகவும், உறுப்பினர்கள், தகுதி நீக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள ராஜினாமா செய்கிறார்கள் என்றால் அதை எப்படி ஏற்றுக்கொள்வது  என்று கூறினார்.

அதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,  அரசியல் சாசன அதிகாரங்களை நினைவுபடுத்தும் சபாநாயகர்,  அதனை பின்பற்றாமல் இருப்பது ஏன்? என்றனர்.

தொடர்ந்து வாதாடிய  அபிசேக் சிங்வி,  சபாநாயகருக்கு உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என்று குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கடந்த ஆண்டு ஒரு வழக்கில் சபாநாயகருக்கு உத்தரவிட்ட போது நீங்கள் மகிழ்ச்சியாக சென்றீர்களே என்று சுட்டிக்ககாட்டினார். மேலும்,  அந்த வழக்கில், இடைக்கால சபாநாயகரை நியமித்து 24 மணி நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது இதே உச்சநீதிமன்றம் தான் என்பதை மறந்துவிடாதீர்கள் என்றும் நினைவூட்டினர்.

தொடர்ந்து பரபரப்பான வாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், சபாநாயகர் முடிவில் தலையிட மறுத்த உச்சநீதி மன்றம் இது தொடர்பான உத்தரவை நாளை காலை 10.30 மணிக்கு அறிவிப்பதாக கூறி உள்ளது.