லண்டன்

மதுபான தொழிற்சாலை அதிபர் விஜய் மல்லையா வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டார். அவரை இந்தியா அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பான விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா சட்டமன்ற தேர்தல் மே 12-ம் தேதி நடக்கிறது. விஜய் மல்லையா கர்நாடகாவை சேர்ந்தவர். 2 முறை ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.

இந்நிலையில் லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா நிருபர்களிடம் கூறுகையில், “கர்நாடக தேர்தலில் வாக்களிப்பது என்னுடைய ஜனநாயக உரிமை. நான் எங்கு இருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். இந்தியாவிற்கு திரும்ப முடியாது” என்று தெரிவித்தார்.

கர்நாடகா தேர்தல் நிலவரம் குறித்து அவர் கூறுகையில், ‘‘அரசியல் நிலவரங்களை நான் மிகவும் கூர்மையாக தொடரவில்லை. எனவே என்னிடம் எந்த ஒரு கருத்தும் இல்லை’’ என்றார்.