பலாமு சரணாலயம், ஜார்க்கண்ட்
கர்நாடகாவில் இருந்து கொண்டு ஜார்க்கண்ட் கொண்டு வரப்பட்ட 3 யானைகளுக்கு இந்தி மொழி புரியாததால் சிரமத்துக்கு உள்ளாகின்றன.
கர்நாடகா மாநிலம் பந்தேப்பூர் வனப்பகுதியில் இருந்து 3 யானைகள் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தில் பலாமு புலிகள் சரணாலயத்துக்கு அனுப்பப் பட்டுள்ளன. காலபைரவா, சீதா, மற்றும் அதன் குட்டியான முருகேசன் ஆகிய மூன்று யானைகளுடன் இரு யானைப் பாகர்களும் அனுப்பப் பட்டுள்ளனர்.
இந்த யானைகளுக்கு இதுவரை கன்னட மொழியில் கட்டளைகள் இடப்பட்டு இருந்தன. தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தி மொழியில் கட்டளைகள் இடப்படுவதால் யானைகளுக்கு புரியவில்லை எனவும் இதனால் மிகவும் சிரமத்துக்கு உள்ளாவதாகவும் தெரிய வந்துள்ளது. தற்போது அந்த யானைகளின் பாகர்கள் இந்திக் கட்டளைகளை கன்னடத்தில் மொழி பெயர்த்து சொல்லி வருகின்றனர்.
இது குறித்து அந்த சரணாலயத்தின் இயக்குனர் சிங், “யானைகளுக்கு உடல் மொழி மற்றும் உச்சரிப்பு மட்டுமே புரிந்துக் கொள்ள முடியும். இந்தி மொழி மற்றும் கன்னட மொழியில் உச்சரிப்பு மாறு படுவதால் யானைகளுக்கு கட்டளைகள் புரிவதில்லை. வழக்கமாக யானைகள் ஒரே மாதத்தில் புரிந்துக் கொண்டு விடும்.
ஆனால் இந்த யானைகள் அதிக நாட்கள் எடுத்துக் கொள்கின்றன. அதனால் இந்த யானைகளின் இரு பாகர்களும் யானைகள் முழுமையாக இந்தியை புரிந்துக் கொள்ளும் வரை உடன் இருப்பார்கள்” என தெரிவித்துள்ளார். மேலும் இந்த யானைகள் இங்குள்ள பாகர்களிடமும் சரியாக பழகாமல் உள்ளன. அவைகளை ஜார்க்கண்ட் பாகர்களிடம் பழக்கப் படுத்தும் முயற்சியிலும் கன்னட யானைப் பாகர்கள் ஈடுபட்டுள்ளனர்.