பெங்களூரு: பிரிட்டனில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், டிசம்பர் 7ம் தேதியிலிருந்து, பெங்களூரு மற்றும் மங்களூரு விமான நிலையத்திற்கு, பிரிட்டனிலிருந்து வந்திறங்கிய பயணிகளின் விபரங்களை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது, முந்தைய வைரஸ் வகையைவிட, மிக விரைவாகப் பரவும் கொரோனா வைரஸ் பிரிட்டனில் பரவி வருகிறது. இதனால் அந்நாட்டில் பல்வகை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அந்த வைரஸ் இந்தியாவிற்குள்ளும் நுழையாத வகையில், சில கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், பெங்களூரு மற்றும் மங்களூரு விமான நிலையங்களில், இந்தப் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், பிரிட்டனிலிருந்து வரக்கூடிய அனைத்துப் பயணிகளுக்கும் ஆர்-பிசிஆர் பரிசோதனை அவசியம் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரிட்டனுக்கு வெளியிலுள்ள விமான நிலையங்களின் மூலம் வருவோருக்கும் இந்தப் பரிசோதனையைக் கட்டாயமாக்கியுள்ளது கர்நாடக அரசு.