பெங்களூரு: அரசு வேலை வேண்டும் என்றால் என்னோடு உறவு கொள்ள வேண்டும் என்று,  என கர்நாடகாவின் நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி ஒரு பெண்ணிடம் பேசிய வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையில் பாரதியஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின்  நீர்வளத்துறை அமைச்சராக  ரமேஷ் ஜர்கிஹோலி இருந்து வருகிறார். அவரிடம் பெண் ஒருவர் அரசு வேலைக்கேட்டு சென்றுள்ளார். அந்த பெண்ணை அமைச்சர்,  பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும்,  அத்துமீறியதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி என்பவரின் உதவியை நாடியுள்ளனர்.  அவர்,  கர்நாடக போலீஸ் கமிஷனர் கமல்பந்த்தை நேரில் சந்தித்து புகார் அளித்ததுடன், இதுகுறித்து  தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

இதற்கிடையில், அந்த பெண்ணிடம் அமைச்சர் பேசும் ஆடியோ மற்றும் வீடியோ ஊடகங்கங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைத்தொடர்ந்து அமைச்சர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யாமல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க ரமேஷ் ஜர்கிஹோலி மறுத்துவிட்டார். ஆனால், அமைச்சர் உடனே பதிவி விலகவேண்டும் என  காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அமைச்சர் மீதான பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது