சென்னை:

ண்ணீர் தரமுடியாது என சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு தாக்கல் செய்த அறிக்கையை ஏற்க முடியாது.  கர்நாடகா தண்ணீர் திறந்தே ஆக வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் கர்நாடகா இன்று தாக்கல் செய்துள்ள மனு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர், கர்நாடக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையை ஏற்க முடியாது என்றார்.

ஏற்கனவே  உச்சநீதிமன்றம் கூறிய படி காவிரியிலிருந்து கர்நாடகா தண்ணீர் திறந்தே ஆக வேண்டும். கர்நாடகா எந்த அறிக்கை தாக்கல் செய்தாலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமாகவே  இருக்கும் என்றதர்.

மேலும், நீட் குளறுபடி குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த ஆண்டு நீட் தேர்வு மையம் வெளி மாநிலங்களில் ஒதுக்கப்பட்டதற்கு முழுக்காரணம் சிபிஎஸ்இ தான் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். ஆனால்,   அடுத்தாண்டு எத்தனை பேர் நீட் தேர்வு எழுதினாலும் அனைவருக்கும் தமிழகத்தில் தான் தேர்வு நடக்கும் என்றும் உறுதிபட தெரிவித்தார்.

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்படுவது குறித்த கேள்விக்கு, யாரையும் கைது செய்ய வேண்டும் என்பது எங்கள் நோக்கம் இல்லை என்ற அமைச்சர், 7-வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தரப்பட்டது என்றார்.

தமிழகத்தில் எவ்வளவு  நிதிநெருக்கடி இருந்தாலும் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.. அரசு வருமானத்தில் பெரும் பகுதி ஊழியர்களுக்கு தான் சம்பளமாக வழங்கப்படுகிறது என்ற அமைச்சர் அரசாங்கத்துக்கு வருமானம் வானத்தில் இருந்து கொட்டுவதில்லை என்றும் கறாராக கூறினார்.