ன்னராட்சியோ..மக்களாட்சியோ..அரியணையை பிடிக்க பங்காளிகளுக்குள் சண்டை நடப்பது- இதிகாச காலத்தில் இருந்தே நடந்து கொண்டுதான் இருக்கிறது.

தசரதன்களால் வேடிக்கை பார்க்க மட்டுமே முடிகிறது.

கர்நாடகத்தில் இவ்வாறு வேடிக்கை பார்க்கும் தசரதனாக இருக்கிறார்- தேவகவுடா.

இவர்- முன்னாள் முதல்வர். முன்னாள் பிரதமர். மதசார்பற்ற ஜனதா தளம் என்ற கட்சி கவுடாவின் குடும்ப சொத்தாக உள்ளது.

எத்தனைத்தான் நேர்த்தியாக பாகம் பிரித்து கொடுத்தாலும் –அவரது குடும்பத்து வாய்க்கால்-வரப்பு சண்டை ஓய்வதில்லை.

அவரது கட்சி கடந்த சட்டசபை தேர்தலில் 30 சொச்சம் இடங்களில் வென்ற போதும், காங்கிரசிடம் கையேந்தி தனது கட்சியை ஆட்சியில் அமர வைத்தார்-தேவகவுடா.

ஒரு மகன் குமாரசாமி –முதல்-அமைச்சர்.மற்றொரு மகன் ரேவண்ணா – பொதுப்பணித்துறை  அமைச்சர். கொஞ்ச நாள் கழித்து இந்த வரிசையை இடம் மாற்றும் திட்டம் அவருக்கு உண்டு.

விரைவில் மக்களவை தேர்தல் வர உள்ள நிலையில்- கவுடாவின் பூர்வீக சொத்தான ஹாசன் எம்.பி.தொகுதிக்கு – அவரது பேரன்கள் உரிமை கொண்டாடி- சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார் கள்.

ஒரு பேரன்-பிரஜ்வால்.அமைச்சர் ரேவண்ணாவின் மகன்.இன்னொரு பேரன்-நிகில்.முதல்வர் குமாரசாமியின் மகன். இவர் நடிகராகவும் இருக்கிறார்.

நிகில்-அரசியலில் ஈடுபடுவதில் குமாரசாமிக்கு ஆரம்பத்தில் ஆர்வம் இல்லை.

ஆனால் சில தினங்களுக்கு முன்பு –‘’எனது ஹசன் தொகுதியில் பேரன் பிரஜ்வால் போட்டி யிடுவார்’’ என்று தேவகவுடா அறிவிக்க-  குடும்பத்தில் நெருப்பு பற்றிக்கொண்டது.

அங்கேயும் சில கூனிக்கிழவிகளும், சகுனி கிழவர்களும் இருந்தனர்.

ஹசன் தொகுதியில் பிரஜ்வால் நின்றால் எளிதில் ஜெயித்து விடுவார் என்ற சூழலில்-குமாரசாமியை சூடேற்றினர் அவரது ஆதரவாளர்கள்.

‘’ஹசன் தொகுதியில் பிரஜ்வால் வென்றால் உங்களுக்கு போட்டியாக உருவெடுப்பார். உங்கள் முதல்வர் பதவிக்கே ஆபத்து  வரலாம்’’ என பற்ற வைக்க-

அதன் பிறகே –தன் சொந்த மகன் நிகிலை அரசியலில் முன் நிறுத்தும்  வேலைகளை  ஆரம்பித்துள்ளார் குமாரசாமி.நிகிலுக்கு சீட் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை..பிரஜ்வாலுக்கு கிடைக்க கூடாது என்பது அவரது திட்டம்.

‘’அடுத்த பிரதமர் தேவகவுடா தான்’’ என்று இரண்டு தினங்களுக்கு முன்பு குமாரசாமி பேட்டி அளித்ததன் சூட்சுமம் இதுதான் என்கிறார்கள்- அரசியல்  நோக்கர்கள்.

–பாப்பாங்குளம் பாரதி