ஹூப்ளி:

கர்நாடகாவில் விபத்தில் சிக்கி உயிருடன் இருந்தவரை இறந்து விட்டார் என கூறி மருத்துவமனை நிர்வாகம் பிரேத பரிசோதனை செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் சாலை விபத்து ஒன்றில் நேற்றிரவு பிரவீன் மூலே (வயது 23) என்பவர் சிக்கினார். அவர் கர்நாடக மருத்துவ அறிவியல் மையத்திற்கு (கே.ஐ.எம்.எஸ்.) கொண்டு செல்லப்பட்டு உள்ளார். அங்கிருந்த மருத்துவமனை அதிகாரிகள் பிரவீன் இறந்து விட்டார் என கூறி பிரேத பரிசோதனை கூடத்திற்கு அவரது உடலை அனுப்பியுள்ளனர்.

எனினும் மருத்துவமனைக்கு வந்த பிரவீனின் உறவினர்கள் உடலை பரிசோதித்துள்ளனர். இதில் பிரவீனின் இருதய துடிப்பு சீராக இருந்துள்ளது. அவர்கள் உடனடியாக மருத்துவரிடம் இதுபற்றி கூறியுள்ளனர். ஆனால், 7 மணி நேரம் வரை மைனஸ் 20 டிகிரி வெப்ப நிலையில் பிரவீன் வைக்கப்பட்ட நிலையில் அவர் இறந்து விட்டார்.

இதனால் பிரவீனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போராட்டம் நடத்தினர். பிரவீனின் உறவினர்கள் கூறுகையில், ‘‘பிரேத பரிசோதனை கூடத்தில் பிரவீனின் உடலில் அசைவு இருந்தது. ஆனால் மருத்துவர்கள் அங்கு வந்து, உயிருடன் இருக்கிறான் என கூறிய பின்னரும் பிரேத பரிசோதனை செய்தனர்’’ என்றனர்.