சென்னை:

 கார்த்தி சிதம்பரத்தின்  வீட்டில் நேற்று சோதனை நடைபெற்று வந்த நிலையில், அவரது ஆடிட்டரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உயர்நீதி மன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அவரது ஆடிட்டர் கைது செய்யப்பட்டிருப்பது, அவரது வெளிநாட்டு பயணத்தை தடுக்கும் விதமாக இருக்கலாம் என்று கூறப்படுகறிது.

ஆடிட்டரை  டில்லி அழைத்து சென்று விசாரணை நடத்தவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்திற்கு அன்னிய முதலீடு பெற்று தந்ததில் முறைகேடு நடந்ததாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனையுடன் சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கியது.

இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் வீடு  மற்றும் அலுவலகங்களில் ஏற்கனவே பல முறை சோதனை நடைபெற்ற நிலையில், நேற்று மீண்டும் சோதனை நடத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து அவரது ஆடிட்டர் பாஸ்கரன் ராமனை அமலாக்கத்துறையினர் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து அவரை கைது செய்துள்ள அமலாக்கத்துறையினர், அவரை டில்லி அழைத்துச் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கார்த்தி சிதம்பரத்தின் வெளிநாடு பயணத்தை தடுக்கவே அமலாக்கத்துறையினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.