டில்லி,

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வங்கி கணக்குகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐ.என்.எக்எஸ். நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு முதலீடுகளை பெற்று தந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ.  வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் அவரது வங்கி கணக்குகளை முடக்கி மத்திய அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐஎன்எக்ஸ் முறைகேடு  தொடர்பான விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஆஜர் ஆகாமல் தவிர்த்து வந்தார். இதையடுத்து, அவர் வெளிநாட்டுக்கு ஓடிவிடாமல் தடுக்கும் வகையில்,  அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்த நோட்டீசை ரத்து செய்ய மறுத்த உச்சநீதி மன்றம், அவரை சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்க ஆஜராக உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து சிபிஐ அலுவலகத்தில் பலமுறை விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஆஜரானார்.

இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் வங்கி கணக்குகளை முடக்கி மத்திய அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. இதன் காரணமாக வங்கி கணக்கில் உள்ள சுமார் 90 லட்சம் பணம் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.