டில்லி:

என்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு, டில்லி திகார் ஜெயிலில் நீதி மன்ற காவலில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கார்த்தி சிதம்பரத்தின் ஏ.எஸ்.சி.பி.எல். (ASCPL) நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.1.16 கோடி மதிப்பிலான சொத்துகளை மட்டுமே முதல்கட்டமாக அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு முறைகேடாக அனுமதி பெற்றுத்தந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கடந்த பிப். 28-ம் தேதி காலை சென்னை விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

தொடர்ந்த 12 நாட்கள் போலீஸ் காவலில் அவர் விசாரிக்கப்பட்ட நிலையில், தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் அமலாக்கத்துறையும் கைது செய்து விசாரிக்க கோரியிருந்தது. இதற்கு டில்லி ஐகோர்ட்டு தடை விதித்துள்ள நிலையில், அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கார்த்தி சிதம்பரத்துக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான முதலீடுகள், சொத்துக்கள் உள்ள நிலையில், ஒரே ஒரு நிறுவனத்தை சேர்ந்த 1.16 கோடி மதிப்புள்ள சொத்துக்களை மட்டும் அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.