தொழில்முறையாக நடந்து கொள்ளவில்லை என்பதால் ‘தோஸ்தானா 2’ திரைப்படத்திலிருந்து கார்த்திக் ஆர்யன் நீக்கப்பட்டுள்ளார். இனி தர்மா ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும் கரண் ஜோஹரின் எந்த ஒரு திரைப்படம் தொடர்பான வாய்ப்பும் வழங்கப்படாது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

‘தோஸ்தானா 2’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 20 நாட்கள் படப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில் “தோஸ்தானா 2 திரைப்படத்தின் நடிகர் தேர்வு மீண்டும் நடைபெறும். இதற்கான காரணம் குறித்து நாங்கள் கண்ணியத்துடன் அமைதி காக்க முடிவெடுத்துள்ளதால் தொழில்முறை காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என தர்மா ப்ரொடக்‌ஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதில் யார் பெயரும் இல்லை என்றாலும், கார்த்திக்கின் முறையற்ற அணுகுமுறையால் வேறு வழியில்லாமல் இந்த முடிவை தயாரிப்பு தரப்பு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. எந்தெந்த தேதியில் கார்த்திக் ஆர்யன் படப்பிடிப்புக்கு வருவார் என்பது குறித்து சரியாகத் தெரிவிக்கப்படவில்லை என்பதே இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. இதனால் தர்மா ப்ரொடக்‌ஷன்ஸுக்குக் கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் வரை நஷ்டம் என்று தெரிகிறது.

இது தவிர கரண் ஜோஹர் தயாரிப்பில் ‘கிரிக்கெட் ஸ்டோரி’ என்கிற படத்திலும் கார்த்திக் ஆர்யன் நடிப்பதாக இருந்தது குஞ்ஜன் சக்சேனா திரைப்படத்தின் இயக்குநர் ஷரன் சர்மா இதை இயக்குகிறார். இந்தத் திரைப்படத்திலும் கார்த்திக்குக்கு பதிலாக வேறொரு நடிகரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது.