நெட்டிசன்:

சாவித்திரிகண்ணன் அவர்களது முகநூல் பதிவில் இருந்து..:

ரத முனி என்பவர்தான் பரதநாட்டியத்தை உருவாக்கியவர் என்று கற்பனையாக ஒரு கதையை உருவாக்க அதை நிறுவ முயல்கிறது ஒரு கூட்டம். பிரபல பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியன், பரதமுனிக்கு ஒரு நினைவு மண்டபம் கட்டி நேற்று திறப்புவிழா நடத்தியிருக்கிறார்.

பரதக்கலை என்பது சதிராட்டம்தான். ருக்குமணி அருண்டேல் போன்றவர்கள் இதனை நமது கணபதி முதலியார் உள்ளிட்ட தமிழ்நாட்டு நட்டுவனார்களிடம் கற்றுக்கொண்ட பிறகு இதற்கு இந்திய அளவிலான ஒரு ஒப்புதல் கருதி, ‘பரதநாட்டியம்’ என்ற சொற்பிரயோகத்தைக் கொண்டு வந்தனர். அதற்கு முன்பு நம்முடைய எந்த இலக்கியத்திலும், கல்வெட்டிலும் ‘பரதநாட்டியம்’ என்ற சொல்லே இல்லை! சதிர்தான்.

சதிராட்டம் எனும் நமது தமிழ் நாட்டிய மரபைப் பற்றிய முழு விவரத்தையும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் எழுதியுள்ளார். ஆடல், பாடல் என்று வாழ்ந்த தமிழ் மரபில் மக்கள் மொழியில் இது சதிராட்டம் என்றும், கூத்து என்றும் பேர் பெற்றது.

கருணாநிதி

ஆடல் கலைக்கு சிவனையே மூலவனாகக் கருதும் தன்மை தொன்றுதொட்டு இருந்துள்ளது. வேறெந்தத் தனி நபரையோ அல்லது குறிப்பிட்ட சமூகத்தையோ அடையாளப்படுத்திப் பார்க்கும் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. நடராஜனின் சிதம்பரம் கோயிலில் கூட இப்படியான ஆதாரங்கள் எதுவுமில்லை. ஆனால் சதிராட்டத்திற்கு ஆதாரமாக சங்க காலம் தொடங்கி 20 ஆம் நூற்றாண்டு வரை ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

ராஜ ராஜ சோழனின் சகோதரி குந்தவை நாச்சியார் தொடங்கி இன்னும் நம்மிடையே  வாழ்ந்து கொண்டிருக்கும் தேவதாசி மரபின், கடைசி எச்சமான 80 வயதைக் கடந்த பாட்டி விராலிமலை முத்துக்கண்ணம்மாள் வரை சதிராட்டத்திற்கான சரித்திரச் சான்றுகள் உள்ளன!

பரத முனி என்ற கற்பனை சிருஷ்டியைப் புதிதாக உருவாக்கி அவருக்கு ஒரு நினைவு மண்டபம், கண்காட்சி அரங்கம், அதற்கு ஒரு திறப்புவிழா நாளை (ஏப்ரல் 27) நடக்கிறது. பரத முனி தான் நாட்டிய சாஸ்திரத்திற்கு இலக்கணம் வகுத்தவராம்!

முகநூல் பதிவு

என்னே ஒரு பித்தலாட்டம்! பிரபல சிற்பிகள் மெய்மன், கீர்த்திவர்மன்….. உள்ளிட்டோர் இதற்குக் கடுமையான மறுப்பைத் தெரிவித்துள்ளனர்.

“பரதமுனி” என்கிற கற்பனைக்கு சிலை வடிவம் கொடுத்தவர்,  பல தில்லுமுல்லுகள் செய்து இன்று சிறைப்பட்டுள்ள முத்தையா சிற்பி! இந்த பரதமுனி நினைவு மண்டபத்தைக் குத்துவிளக்கேற்றித் திறந்து வைப்பது சமீபத்தில் பத்மவிபூஷண் விருதுபெற்ற நாகசாமி. இவர் வரலாற்றைத் திரித்து மதரீதியாகவும், இன ரீதியாகவும் உள்ளர்த்தங்களைத் திணித்து எழுதியவர் என்ற கடுமையான குற்றச்சாட்டுக்கு ஆளானவர். அழைப்பிதழில் ’காஞ்சி மகா ஸ்வாமிகளின் அருளாசியுடன்’ என்ற வாசகம் கண்டேன். நூறாண்டு வரலாற்றுப் பின்னணி கூட இல்லாத காஞ்சிபுர சங்கர மடத்திற்கு 1500 ஆண்டு காலப் போலி வரலாற்றைத் துணிந்து சித்திரித்தவர்களல்லவா? வேறெப்படி இருக்கும்?

இதில் இன்னொரு விசயமும் கவனிக்கத்தக்கது.

பரதமுனி நினைவு மண்டபத்திற்கு 5 ஏக்கர் நிலத்தை பத்மா சுப்பிரணியம் பெற்றது ஜெயலலிதா ஆட்சியில்! அதன் அடிக்கல் நாட்டுவிழா நடந்தது கருணாநிதி ஆட்சியில். இந்த நிகழ்ச்சிக்காக ஒரு வாழ்த்து மடல் தருமாறு அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார் பத்மா.

இது குறித்து கருணாநிதி பொது நிகழ்வு ஒன்றில் பேசி அது தினகரன் நாளிதழில்  பிரசுரமாகியுள்ளது.

அதில் கருணாநிதி, “இன்று காலையில் என்நெஞ்சில் பெரிய பாறாங்கல் போட்டது போன்ற ஒரு நிகழ்ச்சி நடந்தது. என் உதவியாளர் சண்முகநாதன் ஒரு தாளை கையெழுத்திற்காக அனுப்பினார். பரதமுனிவர் பெயரிலான அறக்கட்டளைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு முதல்வர் வாழ்த்து கேட்கப்பட்டு இருந்தது.

நான் என்றும் அப்படி சீறியதில்லை.

“நீ தமிழன் தானே..” என்று சண்முகநாதனிடம் கேட்டேன்.
“பத்மா சும்பிரமணியம் இந்த இடத்தை வாங்கி பரதமுனிவர் பெயரில் அறக்கட்டளை தொடங்குகிறார்.” என்றார்.

“பரதமுனிவர் தான் பரதநாட்டியத்தையே தந்தவர் என்றால் யார் நம்புவது? திராவிடக்கலைகள், பண்பாடு ஆகியவற்றை மெல்ல, மெல்ல அழித்து வந்த பண்பாடு, கலைநாகரீகம் மீண்டும் படை எடுப்பு நடத்த தொடங்கி இருக்கிறது. அது தான் அடிக்கல் நாட்டுவிழா அழைப்பு. இது அழைப்பு அல்ல.
யாருக்கோ தேவையான பிழைப்பு. நம்மை தாழ்த்தும், அவமானப்படுத்தும் நினைப்பு. அந்த நினைப்பை வேரறுக்க வேண்டும்” என்று பேசினார் கருணாநிதி. அதோடு, பத்மா சுப்ரமணியத்திற்கு வழங்கப்பட்ட 5 ஏக்கர் அரசு நிலத்தை திரும்ப பெறும் முயற்சிகளை மேற்கொண்டார்.

ஆனால் என்ன காரணமோ அது நடக்கவில்லை.

ஆனால் அதைவிட அதிர்ச்சியான விசயம் ஒன்று நடந்தது.

பரதமுனிவர் நினைவு மண்டபத்திற்கு இரண்டாவது முறையாக அடிக்கல் நாட்டி பூஜைபோடும் விழாவிற்கு கருணாநிதியே தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். இது நடந்தது அக்டோபர் 2010.

(இரண்டாவது) அடிக்கல்நாட்டு விழாவில் பத்மாசுப்பிரமணியததுடன் கருணாநிதி

அப்போது பேசிய கலைஞர், “பரதம் என்றாலே பரதர். பரதர் உருவாக்கியதே பரதம். அதில் நாம் வேறுபடவில்லை, மறுக்கவில்லை. உங்களுக்கும் எங்களுக்கும் பொதுவாக பரதர் இளங்கோ அறக்கட்டளை என பெயர் வைத்துக்கொள்வோம்” என்றார்.

கருணாநிதிக்குள் எப்படி, ஏன் இந்த மாற்றம் ஏற்பட்டது என்று தெரியவில்லை. ஒரு வரலாற்று தலைவனாக மேலெழுந்து வந்திருக்கவேண்டிய கருணாநிதி, இப்படித்தான் அடிக்கடி வழுக்கி வீழ்ந்தார் என்பதே நம் காலத்தின் மிகப்பெரிய துரதிஷ்டம்.