காஷ்மீர் பிரச்சினையை ஆப்கானிஸ்தானுடன் ஒப்பிடாதீர்கள் என்றுபாகிஸ்தான் அரசுக்கு தலிபான்கள்  கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகளுக்கான சட்டம் 370, 35ஏ ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தையும் மத்திய அரசு  இரண்டாகப் பிரித்து அறிவித்தது.

மத்திய அரசின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அமெரிக்கா, ஐநா உள்பட பல நாடுகளின் ஆதரவையும் கோரியது. மேலும், மீண்டும் ஒரு புல்வாமா தாக்கு தலை சந்திக்க நேரிடும் என இந்தியாவை எச்சரித்ததுடன்,  இந்தியா உடனான உறவுகளை துண்டிப்பதாகவும் அறிவித்து உள்ளது.

இதன் காரணமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பதற்ற மான சூழல் நிலவுகிறது. இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் முஸ்லீம் லீக் -நவாஸ்(பிஎம்எல்-என்) கட்சியின் தலைர் ஷென்பாஸ் ஷெரீப்,  “ஆப்கானிஸ்தான் மக்கள் சந்தோஷமாக இருக்கி றார்கள். காபூலில்கூட அமைதி நிலவுகிறது. ஆனால், காஷ்மீர் ரத்தக் களறியாக இருக்கிறது துப்பாக்கி குண்டுகள், வெடிகுண்டுகள் வெடிக்கும் சூழல் நிறைந்த ஆப்கானிஸ்தானில்கூட தற்போது அமைதி நிலவுகிறது, ஆனால்  ஜம்மு காஷ்மீரில் இன்னும் அமைதி வரவில்லை என்று பேசியிருந்தார்.

இதற்கு தலிபான்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.  தலிபான் தீவிரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் இதுதொடர்பாக பாகிஸ்தானை கண்டித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அதில், “ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு சமீபத்தில் ரத்து செய்துவிட்டதாக செய்தி கிடைத்தது.  அங்கு மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் முஸ்லிம் மக்கள் பெரிய பாதிப்பை எதிர்கொண்டிருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து நாங்கள் வருத்தப்படுகிறோம். அந்தப் பகுதி  மீண்டும் வன்முறைக்கும், குழப்பத்துக்கும் செல்லாத வகையில் இரு நாடுகளும் தடுக்க வேண்டும் என்றும்,  காஷ்மீர் மக்களுக்கு சட்டப்பூர்வமாக  உரிமை வழங்கிட வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.

மேலும்,  காஷ்மீர் விவகாரத்தை சில கட்சிகள் ஆப்பானிஸ்தானுடன்  இணைத்துப் பேசுகிறார்கள். இது ஒருபோதும், அங்குள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவாது. ஏனென்றால் ஆப்கானிஸ்தான் நிகழ்வுகள் ஜம்மு காஷ்மீருக்குத் தொடர்பில்லாதது. ஆப்கானிஸ்தானை ‘மற்ற நாடுகளுக்கு இடையிலான போட்டி அரங்கமாக’ மாற்ற வேண்டாம் என்று தலிபான் இந்தியாவையும் பாகிஸ்தானையும் கேட்டுக் கொண்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.