தால் ஏரியில் சிறுநீர் கழிக்கும் அமர்நாத் யாத்ரீகர்கள் : காஷ்மீர் மக்கள் கண்டனம்
ஜம்மு
காஷ்மீர் மாநிலத்தின் புகழ் பெற்ற தால் ஏரியில் அமர்நாத் யாத்ரீகர்கள் சிறுநீர் கழிக்கும் படத்தை வெளியிட்டு காஷ்மீர் மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தற்போது காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோவிலுக்கு இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து யாத்ரீகர்கள் வருகின்றனர். அங்குள்ள குகைக் கோயிலில் தற்போது பனி லிங்கம் தரிசனம் செய்ய வந்துள்ள மக்களால் சுற்றுச் சுகாதாரம் பாழாவதாக பலரும் தெரிவிக்கின்றனர். இந்த புகார் சென்ற வருடமும் எழுந்தது,
தற்போது காஷ்மீரில் உள்ள உலகப் புகழ்பெற்ற தால் ஏரியின் கரையில் அமர்நாத் பயணிகள் சிறுநீர் கழிக்கும் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டு காஷ்மீர் மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இங்கு வரும் பயணிகள் யாரும் பொதுக் கழிப்பிடம் எங்குள்ளது என விசாரிக்காமல் ஆங்காங்கு சிறுநீர் கழிப்பதாகவும், சிறு மறைவிடம் அல்லது பேருந்துக்களின் பின்னால் சென்று பெண்களும் சிறுநீர் கழிப்பதாக கூறுகின்றனர்.
ஒரு சில காஷ்மீர் நெட்டிசன்கள் இந்திய அரசின் திட்டமான தூய்மை இந்தியா திட்டத்தையும் இந்த ஏரிக்கரை சிறுநீர் திட்டத்தையும் ஒப்பிட்டு பதிவுகளை பதிந்துள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் பல கழிப்பறைகள் கட்டப்பட்டும் அதில் அடிப்படை வசதிகள் கூட இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் தங்கள் மாநிலத்தை சீர்குலைப்பதாக தெரிவித்துள்ளனர். பத்திரிகையாளர் ஒருவர் ஏராளமான கழிப்பறையைக் கட்டிய அரசு அவை எங்குள்ளது என ஒரு அறிவிப்புப் பலகையை பொருத்தாததே இந்த சீர்கேட்டுக்கு காரணம் என கூறி உள்ளார்.