ஸ்ரீநகர்

காஷ்மீர் மாநிலத்தில் தடை காரணமாக  நோயாளிகள் பாதிப்படைந்ததாகத் தெரிவித்த மருத்துவரைக் காவல் துறையினர் இழுத்துச் சென்றுள்ளனர்.

காஷ்மீரில் கடந்த 4 ஆம் தேதி முதல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தொலைத் தொடர்பு மற்றும் இணையம் முடக்கப்பட்டுள்ளது. பல அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அரசு தரப்பில் தற்போது தடைகள் விலக்கப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆயினும் காஷ்மீர் நிலை குறித்து நேரில் கண்டறியச் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஸ்ரீநகரில் பத்திரிகையாளர் சந்திப்புக்காக ஒரு அரங்கம் உள்ளது. அந்த அரங்கில் நேற்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் சலீம்  வந்துள்ளார். சிறுநீரக சிகிச்சை நிபுணரான சலீம் தனது கையில் ”இது வேண்டுகோள் – போராட்டம் இல்லை” என எழுதிய அட்டையைப் பிடித்திருந்தார். மருத்துவர்கள் அணியும் மேல் கோட்டை அணிந்த அவர் செய்தியாளர்களிடம் 10 நிமிடங்கள் பேசி உள்ளார்.

உமர் பேசும் போது, “தகவல் தடுப்பு மற்றும் பயணத் தடை காரணமாகப் பல  நோயாளிகளின் வாழ்க்கை அபாயமாகி உள்ளது. குறிப்பாக டயாலிசிஸ் மற்றும் கீமோதெரபி சிகிச்சையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தடையால் எத்தனை நோயாளிகள் உயிரிழந்தார் எனவும் எத்தனை பேருக்குத் தேவைப்படும் உடனடி சிகிச்சைகள் தள்ளிப் போடப்பட்டது என்பது சரியாகத் தெரியவில்லை. என் நோயாளி ஒருவருக்குக் கடந்த மாதம் 6 ஆம் தேதி கீமோதெரபி சிகிச்சை அளிக்க்க வேண்டி இருந்தது. ஆனால் கட்டுப்பாடு காரணமாக அவரால் வர முடியவில்லை.

அதன் பிறகு அவர் 24 ஆம் தேதி கீமோ தெரபி சிகிச்சைக்கு வந்தார்.  ஆனால் கீமோதெரபிக்கான மருந்துகள் கிடைக்கவில்லை. மற்றொரு நோயாளிக்கு ஒரு மருந்து டில்லியில் இருந்து வாங்கவேண்டி உள்ளது. ஆனால் அந்த மருந்தை தற்போதுள்ள நிலையில் வாங்க முடியவில்லை. எனவே அவருடைய சிகிச்சை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இது போல் வாரா வாரம்டயாலிசிஸ் செய்துக் கொள்ள வேண்டிய நோயாளிகள் பலர் இந்த தடை காரணமாக செய்துக் கொள்ளவில்லை.

நமது மாநிலத்தில் ஆயுஷ்மான் பாரத் காப்பிட்டு திட்டத்தில் சுமார் 15 லட்சம் பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தில் அதிகம் பேர் உள்ள மாநிலத்தில் காஷ்மீர் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் இணையம் வேலை செய்யாததால் நோயாளிகளால் இந்த அடையாள அட்டை மூலம் எவ்வித சிகிச்சையும் பெற முடியவில்லை. இதைப்போல் மற்ற பல காப்பிட்டு திட்டங்களில் பதிவு செய்துள்ளோரும் துயருற்று வருகின்றனர். எனவே அரசு உடனடியாக தொலைபேசி இணைப்பு சேவையையாவது அளிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

அவர் பேசிக் கொண்டு இருக்கும்போது அங்கு வந்த  காவல்துறையினர் உமரைப் பிடித்து இழௌதுச் சென்றுள்ளனர். அவரை எங்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்பது இன்னும் தெரியவில்லை. இது குறித்து செய்தியாளர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ அதிகாரியைச் சந்திக்க முயன்றனர். ஆனால் அவர் இந்த சந்திப்பில் கலந்துக் கொள்ளவில்லை. இது குறித்து செய்தியாளர் ஒருவர் அரசு பல விவகாரங்களை மூடி மறைக்க எண்ணுகிறது எனவும் அதனால் தான் உமர் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.