முசாஃபிர் நகர்
காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் நடந்த சிறுமியின் பலாத்கார கொலைக் குற்றவாளி விஷால் குறித்து மேலும் அதிர்ச்சி தகவல்கள் வந்துள்ளன
காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் கடந்த ஜனவரி மாதம் எட்டு வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப் பட்டவர்களில் ஒருவரான விஷால் ஜன்கோத்ரா என்பவர் தாம் பி எஸ் சி படித்து வருவதாகவும் சம்பவம் நடந்த போது தான் முசாஃபிர் நகரில் உள்ள கத்தோலி என்னும் இடத்தில் கேகே ஜெயின் கல்லூரி தேர்வு மையத்தில் தேர்வு எழுதிக் கொண்டிருந்ததாக கூறி உள்ளார். தானும் வேறு மூன்று மாணவர்களும் சேர்ந்து தேர்வில் கலந்துக் கொண்டதாக தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரித்து வரும் விசேஷ புலனாய்வுக் குழு இது குறித்து அந்த தேர்வு மையத்தில் விசாரணை செய்த போது பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த தேர்வில் விஷால் மற்றும் அவர் நண்பர்கள் கலந்துக் கொண்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அந்த தேர்வு நடைபெற்ற இடத்தின் கண்காணிப்பு காமிரா பதிவில் அவர்கள் யாரும் காணப்படவில்லை. இதனால் அவர்களுக்கு பதில் வேறு யாராவது தேர்வு எழுதி இருக்கலாமோ என புலனாய்வுக் குழு சந்தேகம் கொண்டுள்ளது.