ஜம்மு:

காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டிற்கே அவமானம் என்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வேதனை தெரிவித்து உள்ளார்.

காஷ்மீரின் கத்ரா பகுதியில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 6வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கியபின், மாணவர்கள் மத்தியில் பேசிய ராம்நாத் கோவிந்த் சிறுமி பலாத்காரம் இந்தியாவுக்கே அவமானம் என்றும், இனிமேல் இதுபோன்று ஒரு சம்பவம் நடைபெறாதவாறு உறுதியேற்போம் என்றும் கூறினார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது,

நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன பிறகும், கத்துவா சிறுமி பலாத்காரம் போன்ற சம்பவம் நடப்பது நாட்டிற்கே அவமானம். எந்த மாதிரியான சமூகத்தை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும். இனி எந்த சிறுமிக்கோ அல்லது பெண்ணிற்கோ இது போன்று பாதிப்பு ஏற்படாமல் உறுதி செய்வது நமது கடமை.

காமன்வெல்த் போட்டியில் மேரி கோம், மனிகா பத்ரா, மிராபாய் சானு, சங்கீதா சானு, மனு பகிர், வினேஷ் போகத், சாய்னா நெய்வால், ஹீனா சித்து போன்ற இந்தியாவின் மகள்கள் நமக்கு கவுரவத்தை தேடித் தந்துள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.