விஞரும் திரைப்பாடலாசிரியருமான வைரமுத்துவை புகழ்ந்துரைக்க பலர் உண்டு என்பதைப்போலவே அவர் மீது விமர்சனம் வைப்போரும் உண்டு. பிறரது கவிதைகள் பலவற்றை “எடுத்தாண்டுவிடுகிறார்” என்ற குற்றச்சாட்டும் வைரமுத்து மீது உண்டு.  அவரது புகழ் பெற்ற பாடல் வரிகளில் ஒன்றான “ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்” என்ற வரிகள், அப்துல் ரகுமானின் வார்த்தைகள்.

இது குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே, “பாநிரை கவர்தல்” என்ற சிறு புத்தகத்தையே எழுதினார் கவிஞர் அறிவுமதி. அதில், எந்தெந்த பாடல்களில் இருந்து வைரமுத்து வரிகளை எடுத்துக்கொண்டார் என்பதைக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவிஞரும் பாடலாசிரியருமான யுகபாரதி பேசியது புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

யுகபாரதி பேசியது இதுதான்:

“காமு ஷெரீப் எழுதிய “பாட்டும் நானே, பாவமும் நானே” பாடலை, கண்ணதாசன் எழுதியாக வெளியானது என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியிருக்கிறார்.

யுகபாரதி – வைரமுத்து

தென்றல் திரைப்படத்தில், “தந்தனத்தான்.. தனக்குனந்தான் தாண்டவக்கோனே” என்று ஒரு பாடல் வரும். இதற்கு ஆறேழு முறை மெட்டு அமைக்கப்பட்டு அது சரியாக வரவில்லை. இதையடுத்து  இசையமைப்பாளர் வித்யாசாகர் ஒரு நள்ளிரவில் என்னை அழைத்து, “பாரதி.. மெட்டு சரியாக வரவில்லை. அந்த பாடல் கட்டை விரல் வெட்டப்பட்ட தலித் சிறையில் இருந்து பாடுவதாக இருக்க வேண்டும். அதற்கு பல்லவி வேண்டும்” என்றார்.

நானும் இரண்டு மணி நேரத்தில் பல்லவி எழுதி தொலைபேசியில் கூறினேன். அதை அவர் எழுதிக்கொண்டு மெட்டமைத்தார். அது பாடலானது.

ஆனால் திரையில் அது கவிப்பேரரசு வைரமுத்து எழுதியதாக வெளியானது. அவருக்கு இந்தத் தகவல் தெரியாது என்பதுதான் உண்மை. அல்லது தெரிந்திருந்தாலும் சொல்லாமல் இருந்திருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

நானாவது இப்போது சொல்லிவிட்டேன். ஆனால் கவி காமுஷெரீப் கடைசி வரை “பாட்டும் நானே..” பாடலைப்பற்றிச் சொல்லவே இல்லை” என்று பேசினார்.

ஆனால் இதற்கு இதுவரை வைரமுத்து பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த பாடலின் வரி வடிவம்.

 

வணக்கம் வணக்கம் வணக்கம்
நான் வாழும் பூமிக்கு வணக்கம்
இருக்கோ இல்லையோ தெரியாது
ஓரு வேளை இருந்தா சாமிக்கும் வணக்கம்
குத்த வெச்சு கூத்து பார்க்கும் உங்களுக்கு வணக்கம்
உச்சியிலே வந்து பார்க்கும் நிலாவுக்கும் வணக்கும்
பரம்பரை சொல்லித் தந்த பாட்டுக்கும் தான் வணக்கம்
நான் பறை கொட்ட தோலு தந்த மாட்டுக்கும் தான் வணக்கம்
வணக்கம் வணக்கம் வணக்கம்

புத்தம் புது பாட்டு வந்தா தாண்டவக்கோனே
ஏன் ரத்தமெல்லாம் தீ பிடிக்கும் தாண்டவக்கோனே
தப்பெடுத்து அடிக்கையிலே தாண்டவக்கோனே
என் நெத்தியிலே இடி இடிக்கும் தாண்டவக்கோனே
பாட்டு என்னும் சன்னல் வழி தாண்டவக்கோனே
என் பழையகாலம் தெரியுதடா தாண்டவக்கோனே
பாட்டு என்னும் சன்னல் வழி தாண்டவக்கோனே
என் பழையகாலம் தெரியுதடா தாண்டவக்கோனே

(ஹேய்…புத்தம் புது… )

ஏய் மாட்டு வால புடிச்சி மாடக் குளம் கடந்து
தாமரை பூ பறிச்சுத் தந்தேனய்யா என் மச்சினிக்கு
ஆ மஞ்சுவிரட்டுக்குள்ள மயிலக் காளை அடக்கி
தங்கச் செயின் எடுத்து தந்தேனய்யா என் தங்கத்துக்கு
என் ஆனந்திக்கு புடிக்குமுன்னு ஆலமரப் பொந்துக்குள்ள
ஆதியில புடிச்ச கிளி பாதியில பறந்திருச்சே
என் பச்சகிளி அது பறந்த பின்னே
நான் ஒத்த கிளி நாளை செத்த கிளி
தந்தன… தந்தன…தந்தன… தந்தன…
தந்தன… தந்தன…தந்தன… தந்தன…

ராஜா டாக்கீஸுக்குள்ள ரகசியமா நான் குதிக்க
பாஞ்சு புடிச்சானே பாலயத்தான் – அந்த ரங்கசாமி
நேத்து நனவாக நாளை கனவாக
இன்று என் காலடியில் நழுவுதடா, மனம் உருகுதடா
வந்த தேதி சொன்னதுண்டு, வாழ்ந்த தேதி நெஞ்சில் உண்டு
போகும் தேதி எந்த தேதி, ஊரில் யாரும் சொன்னதுண்டா
போகும் தேதி என் போல் கண்டார் உண்டா
அதைக் கண்டுகொண்ட நானும் கடவுள் தாண்டா

பறை பறை பறை பறை பறை பறை பறை பறை…
விலங்கு விரட்ட பிறந்த பறை
கை விலங்கு ஒடிக்க ஒலிக்கும் பறை
கடைசி தமிழன் இருக்கும் வரை
காதில் ஒலிக்கும் பழைய பறை
வீர பறை வெற்றி பறை போர்கள் ஒலிக்கும் புனித பறை
கயிறு கட்டி கடலின் அலையை நிறுத்த முடியுமா
விரலை வெட்டி பறையின் இசையை ஒடுக்க முடியுமா
இது விடுதலை இசை, புது வீறு கொள் இசை
வேட்டையாடி வாழ்ந்த எங்கள் பாட்டனின் இசை

என் பாட்டன் முப்பாடன்களோடு போய் சேரப் போறேன்
இப்ப நான் மறுபடியும் அம்மா கர்ப்பப் பையிலே படுத்துகிட்டேன்
எல்லாரும் அம்மவோட வயித்துக்குள்ளே இருக்குறப்போ தெரியுமாமே
ஓரு இருட்டு, அது இப்ப எனக்குத் தெரியுது
கதகதப்பா இருக்கு, நான் மறுபடியும் பொறந்து வருவேண்டா
பத்திரமா பாத்துக்கங்க என் பறையை…
என் அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் தாண்டவக்கோனே
என் தப்பு சத்தம் கேட்டிடுமா தாண்டவக்கோனே.

யுகபாரதி பேசிய வீடியோ:

வீடியோ நன்றி: ஸ்ருதி டிவி