டில்லி:

பிஎஸ், ஓபிஎஸ் கையெழுத்து போட தடை கோரி, அதிமுக  எம்.பி. கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த வழக்கை, டில்லி உயர்நீதி மன்றம் நாளை விசாரிப்பதாக அறிவித்து உள்ளது.

ஜெ.மறைவை தொடர்ந்து, அதிமுக எடப்பாடி, ஓபிஎஸ் அணி என சிதறியது. பின்னர் இரு அணி களும் ஒன்றிணைந்து, அதிமுக பொதுக்குழுவை கூட்டி, அதிமுக  விதிகளில் திருத்தம் கொண்டு வந்து சசிகலாவை நீக்கினர்.

இந்த நிலையில், காவிரி விவகாரத்தில் மத்தியஅரசின் நடவடிக்கைக்கு எதிராக குரல்  கொடுத்த அதிமுக எம்.பி. கே.சி.பழனிச்சாமியை அதிமுகவில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் காரணமாக கடும் கோபம் அடைந்த கே.சி.பழனிச்சாமி, ஈபிஎஸ், ஓபிஎஸ்-சுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடமும், டில்லி உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். அப்போது, கட்சி சம்பந்தமாக எந்தவொரு முடிவும் எடுக்கக்கூடாது, மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பு மனுவில் ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். கையெழுத்து போடக்கூடாது என்றும் அதற்கு தடை விதிக்கக்கோரியும் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை மனுகூட்டியே விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றத்தில்  கே.சி.பழனிச்சாமி இடைக்கால மனு தாக்கல் செய்தார். மனுவில், வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 26ம் தேதி கடைசி நாள் என்பதால் வழக்கை முன்னதாக விசாரிக்க கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில் வழக்கை நாளை  விசாரிப்பதாக டில்லி உயர்நீதி மன்றம் கூறி உள்ளது.

இதற்கிடையில் கே.சி.பழனிச்சாமி கடந்த வாரம் சென்னை தலைமை செயலகம்  வந்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ்- ஐ சந்தித்து, மீண்டும் அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.