ஐதராபாத்: ஒன்று மாநிலங்களுக்கான நிதியைக் கொடுங்கள் அல்லது அதிகாரத்தைக் கொடுங்கள் என்று மத்திய அரசிடம் பொட்டில் அடித்தார் போல் பேசியுள்ளார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, “மத்திய அரசு தவறான கொள்கைகளை பின்பற்றி நடந்து கொள்ளும் விதம் உண்மையில் எனக்கு வேதனையாக இருக்கிறது. மத்திய அரசின் செயல்பாட்டுக்கு இந்த தேசம் மிகப்பெரிய விலை கொடுக்கப்போகிறது என எச்சரிக்கிறேன். கொரோனா தொற்றால் நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது.
தெலுங்கானா அரசின் மாத வருவாய் ரூ.17 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.1,600 கோடியாக சரிந்துவிட்டது. பிரதமர் மோடியுடன் வீடியோ கான்ஃபரன்சிங்கின் போது, பல்வேறு விஷயங்களை தெளிவாக எடுத்துரைத்தேன்.
மத்திய அரசிடம் பரந்த நிதிக் கொள்கை இருக்கிறது மற்றும் அதிகாரம் இருக்கிறது. எனவே, மாநிலங்களுக்கு நிதியை வழங்கிடுங்கள் அல்லது அதிகாரத்தை வழங்கிடுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றேன்.
பொருளாதார தாராளமயக் கொள்கையுடன் இருப்பதால், மாநிலங்கள் சுயமாக நிதியை பெருக்கிக் கொள்வதற்கான வழிகளையும் தெரிவித்தேன். ஆனால், எந்தவிதமான பதிலும் பிரதமரிடம் இருந்து வரவில்லை. மாநிலங்களுக்கான நிதிப்பொறுப்பு பட்ஜெட் மேலாண்மை மீது கடன் பெறும் அளவை உயர்த்துங்கள், மத்திய அரசு எதையும் பொறுப்பேற்க வேண்டாம்.
எங்களுக்கு கடன் இருக்கிறது, அதை செலுத்தும் காலத்தை ஒத்திவையுங்கள் என்றேன். அதற்கும் பதில் இல்லை.
மாநிலங்களுக்கு இருக்கும் கடனால் மத்திய அரசுக்கு என்ன சுமை வந்துவிடப்போகிறது என்பது எனக்குப் புரியவில்லை. மத்திய அரசின் கொள்கை என்ன என்பது எனக்குத் தெரியவில்லை. இன்னும் சிறிதுகாலம் பொறுமையாக இருப்பேன்; ஆனால் அப்போதும் எதுவும் நடக்காவிட்டால் தெலுங்கானா சார்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்பும்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் செல்ல, அவர்களைக் கட்டணம் செலுத்த மத்திய அரசு சொல்கிறது. வேலையில்லாத, வறுமையில் வாடும் தொழிலாளர்களிடம் பயணக் கட்டணம் கேட்டால் எவ்வாறு கொடுப்பார்கள்? இது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று ஆவேசமாக தெரிவித்தார் அவர்.