டில்லி:

கீழடி, ஆதிச்சநல்லூர் உள்பட 4 இடங்களில் அகழ்வாய்வு நடத்த  மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி 2020ம் ஆண்டு செப்டம்பர் 30ந்தி வரை கால அவகாசம் வழங்கி உள்ளது.

 ‘கீழடியில், 6வது  கட்ட அகழாய்விற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஏற்கனவே 5 கட்ட அகழ்வ ராய்ச்சி நடைபெற்று முடிவடைந்த நிலையில், 6வது கட்ட அகழ்வராய்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனதொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது..

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, கீழடி பள்ளிச்சந்தை புதுாரில், மத்திய தொல்லியல் குழுவினனர் அகழாய்வு பணியில் ஈடுபட்டு வந்தனர்.  இதில், கட்டுமான சுவர்களுடன் கூடிய கட்டடம் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன. முதலில் நடைபெற்ற இரண்டு கட்ட அகழாய்வில், ஏராளமான சான்றுகள் கிடைத்தன. அதைத் தொடர்ந்து, ஐந்தாம் கட்ட அகழாய்வில், இணை இயக்குனர் சிவானந்தம், காப்பாட்சியர் ஆசைத்தம்பி தலைமையில், 10 ஊழியர்கள் மட்டுமே பணியாற்றினர். தமிழக தமிழக தொல்லியல் துறை, இரண்டு கட்ட அகழாய்வை நடத்தியது. இதுவரை 5 கட்ட அகழ்வராய்ச்சி பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.

ஐந்தாம் கட்ட அகழாய்வில் சங்கு வளையல், பானை ஓடு, வில் அம்பு உருவம் பதித்த பானை ஓடு, சூது பவளம், கழுத்து பதக்கம், 2 இஞ்ச் பானை உள்ளிட்ட, 900 பொருட்கள் கண்டறியப்பட்டன.’இந்தப் பொருட்களை, தற்காலிகமாக பார்வையாளர்கள் பார்வையிட ஏற்பாடுகள் செய்ய வேண்டும்; அதை கீழடியிலேயே நடத்த வேண்டும்’ என, பலரும் கோரிக்கை விடுத்தனர்.

ஏற்கனவே  அகழ்வாய்வின்போது  கிடைத்த பொருட்கள்  2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஆறாம் கட்ட அகழாய்வை நடத்த, மத்திய அரசிடம் தமிழக தொல்லியல் துறை விண்ணப்பித்துள்ளது.

ஆனால், மத்தியஅரசு அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வந்தது. இந்த நிலையில் தொல்லியல் துறை ஆர்வலர்கள், உடனே அனுமதி வழங்கக்கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் கீழடி உள்பட  தூத்துக்குடி ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை, ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஆகிய பகுதிகளில் அகழ்வராய்ச்சி செய்ய அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, 2020ம் ஆண்டு செப்டம்பர் 30ந்தேதி வரை அகழ்வராய்ச்சிக்கு அனுமதி வழங்கி உள்ளது.