டில்லி:

குஜராத் மக்கள் தாங்கள் விரும்பும் கட்சிக்கு ஓட்டுப் போட்டு ஆளும் பாஜக.வை தோல்வி அடைய செய்ய வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

குஜராத் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 2 கட்டங்களாக நடக்கிறது. இந்நிலையில் ஆம்ஆத்மி கட்சியின் தேசிய மாநாடு மற்றும் கட்சியின் 5ம் ஆண்டு விழா ராம்லீலா மைதானத்தில் நடந்தது. இந்த மைதானத்தில் தான் ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே போராட்டம் நடத்தி பின்னர் 2012ம் ஆண்டு ஆம்ஆத்மி கட்சி உருவானது.

இதில் டில்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால், அமைச்சர்கள் மனிஷா சிசோடியா, கோபால் ராய், பஞ்சாப் எம்.பி. பகவந்த் மான் உள்பட முக்கிய தலைவர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதில் கெஜ்ரிவால் பேசுகையில், ‘‘ஆம்ஆத்மிக்கு வாக்களிக்க வேண்டும் என்று விரும்பினால் ஆம்ஆத்மிக்கு வாக்களியுங்கள். இல்லை வேறு கட்சிக்கு வாக்களிக்க நினைத்தால் அக்கட்சிக்கு வாக்களியுங்கள். எப்படியோ பாஜக.வை தோல்வி அடைய செய்ய வேண்டும். பாஜக.வை தோல்வி அடைய செய்யும் வேட்பாளர் மற்றும் கட்சிகளுக்கு குஜராத் மக்கள் வாக்களிக்க வேண்டும்’’ என்றார்.