திருச்சூர் :

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் தெங்களூரை சேர்ந்தவர் வர்கீஸ். ஆயுதப்படையில் போலீஸ்காரராக இருந்த இவருக்கு 80 வயது ஆகிறது. இவர் மனைவி பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.

கடினமாக உழைத்து சிறிய அளவில் வணிகம் செய்து வரும் வர்கீஸ், ஏழைகளிடம் இரக்கம் கொண்டவர்.

தங்கள் பகுதியில் சொந்த வீடில்லாமல் வசிக்கும் ஐந்து ஏழைகளுக்கு வர்கீஸ், வீடுகள் கட்டி கொடுத்துள்ளார்.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, ஐந்து பேருக்கும் நேற்று வீட்டுக்கான சாவியை வர்கீஸ் வழங்கினார்.

“சின்ன வயதில் வறுமையின் கொடுமையை அறிந்தவன் நான். காசு இல்லாததால், பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவன். கையில் நாலு காசு வந்தால், ஏழைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என அப்போதே சபதம் செய்தேன்.

இப்போது கையில் கொஞ்சம் காசு உள்ளது. சின்ன வயதில் நினைத்தது போல், இப்போது என்னால் முடிந்த உதவியாக ஐந்து பேருக்கு வீடு கட்டி கொடுத்துள்ளேன்” என தெரிவித்தார், வர்கீஸ்.

இவர் கட்டிக்கொடுத்த வீட்டின் மதிப்பு தலா 7 லட்சம் ரூபாய்.

– பா. பாரதி