திருவனந்தபுரம்: கேரளாவில் 16 வகையான காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்யும் திட்டத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: குறைந்தபட்ச விலை, உற்பத்தி விலையைவிட 20 சதவீதம் அதிகமாக இருக்கும். சந்தை விலையில் சரிவு இருந்தாலும் விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச விலையிலேயே கொள்முதல் செய்யப்படும்.
இதன்மூலம், காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயித்த முதல் மாநிலமாக கேரளா. நவம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.  இந்த திட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றார்.
பல ஆண்டுகளாக கேரள மாநிலமானது, அதன் காய்கறி தேவைகளுக்காக அண்டை மாநிலங்களையே நம்பியுள்ளது. புதிய திட்டத்தின் மூலம், இந்த ஆண்டு காய்கறிகள், கிழங்கு பயிர்கள் ஒவ்வொன்றும் கூடுதலாக 1 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தியை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.