திருவனந்தபுரம்: மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி மருந்தினை  இலவசமாக வழங்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா 2வது அலையானது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மத்திய அரசின் புதிய விதிமுறைகளைப் பின்பற்றி, கொரோனா தடுப்பூசி நிறுவனங்கள் தடுப்பூசியின் விலையை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளன.

அதன்படி,கோவிஷீல்டு தடுப்பூசி விலையானது தற்போது விற்கப்படும் விலையை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இந் நிலையில் மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி மருந்தினை  இலவசமாக வழங்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர்  பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் பினராயி விஜயன் கூறி இருப்பதாவது: கொரோனா தடுப்பூசி மொத்த உற்பத்தியில் 50% உற்பத்தியை மத்திய அரசுக்கும், 50% உற்பத்தியை மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்குமாறும் விதிக்கப்பட்டுள்ள புதிய விதியை நீக்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசிகள் முழுவதையும் மத்திய அரசே கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.