திருவனந்தபுரம்:
கேரளா காங்கிரஸ் கட்சி சார்பில் திருநங்கைகளுக்கான பிரிவு நேற்று துவக்கப்பட்டது.

கட்சியின் முன்னனி தலைவர்கள் முன்னிலையில் நடந்த விழாவில், அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, திருநங்கைகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு கட்சியின் பதவிகள் வழங்கப்பட்டதாக கேரளா காங்கிரஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநங்கை ஒருவர் தெரிவிக்கையில், காங்கிரஸ் கட்சி சார்பில் 34 திருநங்கைகள் உறுப்பினராக சேர்ந்துக் கொள்ளப்பட்டனர். மாநிலக் குழுவில் ஏற்கனவே 50 உறுப்பினர்கள் உள்ள நிலையில், நேற்று முப்பத்தி நான்கு பேர் காங்கிரசில் கட்சி உறுப்பினர்களாகி உள்ளனர். என்று கூறினார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ஆம் தேதி, காங்கிரஸ் கட்சியின் பெண்கள் பிரிவான மகிளா காங்கிரஸின் பொதுச் செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டி, நியமிக்கப்பட்டார் என்பதும், காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் தேசிய அளவில் நிர்வாகியாகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.