ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மார்ச் மாதம் கேரளாவில் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன.

தமிழகம் உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில், கேரளாவில் மட்டும் தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருந்தன.

இந்த நிலையில் 5 ஆம் தேதி (நேற்று முன்தினம்) தியேட்டர்களை திறக்க கேரள அரசு அனுமதி வழங்கியது.

பாதி இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்கலாம் என முதல்-அமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார்.

கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என திரை அரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

அவர்கள் கோரிக்கை ஏற்கப்படாததால் நேற்று முன்தினம் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.

இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க கேரள திரைப்பட வர்த்தக சபையின் சிறப்பு கூட்டம் கொச்சியில் நேற்று நடந்தது.

திரையரங்கு அதிபர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

கேளிக்கை வரி மற்றும், மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற தங்கள் கோரிக்கை ஏற்கப்படாததால். தியேட்டர்களை திறப்பதில்லை என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதனால் வரும் 13 ஆம் தேதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கேரளாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

– பா. பாரதி