திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கி வரும்,  தங்கம் கடத்தல் வழக்கில், இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன் இன்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் உடல்நலம் பாதிப்பு எனக்கூறி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும், கைது நடவடிக்கை மற்றும் விசாரணைகளில் இருந்து தப்பிக்க நெஞ்சுவலி என கூறிக்கொண்டு மருத்துவமனையில் சேர்ந்து படுத்துக்கொள்வது வழக்கம். இதனால், அவர்கள் தற்காலிகமாக தங்களை பாதுகாத்துக்கொள்வார்கள்.
அதுபோல, கேரளாவில் நடைபெற்ற தங்கக்கடத்தல் வழக்கில், முக்கிய குற்றவாளியான ஸ்வப்பனா சுரேஷ்க்கு நெருக்கமாக இருந்ததாகவும், தங்கக்கடத்தல்  கும்பலுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனை, சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தனர்.
இந்த நிலையில் சிவசங்கரன் இன்று திடீரென திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து சுங்க இலாகா அதிகாரிகளும் மருத்துவமனையில் காத்திருக்கின்றனர்.